அவ்வாயுவையே உவமை கூறினார். இனி, ஊதையில் பூதமொத்த சிறுவர் - உயிர்ப்பில்லாத பிராணிகள் போன்று வீமனை யிழத்தலால் அழிவடைந்த மற்றைநால்வரென்றலும் ஒன்று. 'தாதைதாதைபால் சிறுவரைக் கொண்டு சேறலும்' என்றமையால், வீமனில்லாக் குறையைத் தெரிவித்தமை பெறப்படும். (296) 23.- பலருந் தேற்றவும் குந்தி தேறாதுநிற்றல். தருமமன்னனுநகர்ச் சனங்கள்யாவையும் தெருமரறேற்றவுந் தெய்வங்கூறவும் பெருமிதநிமித்தங்கள் பெற்றிபேசவும் வரும்வருமெனமனம் மறுகிவைகினாள். |
(இ-ள்.) வரும் வரும் என - (வீமன்) வருவான் வருவானென்று கூறி, தருமமன்னன்உம் - யம தருமராசனது அமிசமான விதுரராசனும், நகர் சனங்கள் யாவைஉம் - பட்டணத்துச் சனங்களெவையும், தெருமரல் தேற்றஉம் - மனக்கலக்கத்தைத் தெளிவிக்கவும், தெய்வம் - தெய்வங்கள், கூறஉம் - ஆவேசப்பட்டுச் சொல்லவும், பெருமிதம் நிமித்தங்கள் - நல்ல சகுனங்கள், பெற்றி பேசஉம்- (அவன் வருவதற்கு உரிய) அடையாளங்களைக் கூறவும், (குந்திதேவி), மனம் மறுகிவைகினாள் - (தேறாமல்) மனங்கலங்கியே இருந்தாள்; (எ-று.) விதுரன் யம தருமராசனது அமிசமாதலைக் கீழ்ச் சம்பவச் சருக்கத்தில் வந்ததனால் அறிக. சனமென்றது - பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் இருதிணைக்கும் பொதுவாதலால், 'சனங்கள் யாவையும்' என அஃறிணைப்பாற்படுத்துக் கூறினார். பெரும் இதம் நிமித்தங்கள் எனப்பிரித்து - மிக்க நன்மைக்கு உரிய சகுனங்களெனினுமாம். பேச - உணர்த்த என்றபடி: இது - ஒருவகை உபசாரவழக்கு. வரும்வரும் என்ற அடுக்கு - துணிவையும் விளக்குவது. 'வைகுநாள்', 'வைகினார்' என்றும் பாடம். (297) 24.-வீமனை நாகங்கள் சுமந்து கங்கைக்கரையிற்கொண்டு சேர்த்தல். இருந்திளைப்பகன்றபி னிவனைமற்றைநாள் அருந்திறற்போகிக ளரசனேவலால் வருந்தியுற்றெடுத்துமுன் வந்தநீர்வழிப் பொருந்திரைக்கங்கையின் கரையிற்போக்கவே. |
இதுமுதல் மூன்று கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) இருந்து - (வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்) தங்கியிருந்து, இளைப்பு அகன்றபின் - இளைப்பாறியபின்பு, மற்றைநாள் - அடுத்தநாளில், அரு திறல் போகிகள் - (பிறவுயிர்க்கு) அரிய வலிமையையுடையநாகங்கள், அரசன் ஏவலால் - (தங்கள்) அரசனான வாசுகியினது கட்டளையினால், இவனை வருந்தி உற்று எடுத்து - இவ்வீமனை வருந்திச் சுமந்தெடுத்து, முன் வந்த நீர் வழி - முன்பு (இவன்) வந்த நீரின் வழியாய்க் (கொண்டுவந்து), பொரும் திரை கங்கையின் கரையில் போக்க - மோதுகின்ற அலைகளையுடைய கங்கா நதியின் கரையிலே செலுத்திவிட,- (எ-று.) -"மேனியான் [வீமன்] ஆயினான்" என 26- ஆங் கவியோடு முடியும். |