30.-கிருபன் கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் வில்வித்தை பயிற்றல். மற்றிவன்சந்தனு மைந்தனேவலால் கொற்றவரருள்குரு குலகுமாரரை வெற்றிகொள்சிலையும்வெவ் வேலும்வாளமும் பற்றலர்வெருவரும் படிபயிற்றினான். |
(இ-ள்.) இவன் - இந்தக்கிருபன்,- சந்தனுமைந்தன் ஏவலால் - சந்தனுவென்னும் அரசனது குமாரனான வீடுமனது கட்டளையால், கொற்றவர் அருள் குருகுல குமாரரை - வெற்றியையுடைய (திருதராட்டிரன் பாண்டு என்ற) அரசர்கள் பெற்ற குருகுலத்துக்கு உரிய மக்களாகிய நூற்றைவரையும், வெற்றிகொள் சிலைஉம் வெம் வேல்உம் வாளம்உம் - சயத்தைக் கொள்ளுகிற விற்படையையும் கொடிய வேற்படையையும் வாட்படையையும், பற்றலர்வெருவரும்படி பயிற்றினான் - பகைவர்கள் அஞ்சும்படி கற்பித்தான்; (எ-று.) (304) 31.- வீடுமன் கிருபனினுஞ் சிறந்த ஒரு குருவை நாடுதல். பரிவுட னிவன்படை பயிற்றப் பின்னருங் குருபதி வேறொரு குருவைத் தேடினான் இருளற மதிநில வெறித்த தாயினும் பரிதியை நயக்குமிப் பரவை ஞாலமே. |
(இ-ள்.) இவன் - இந்தக்கிருபன், பிரிவுடன் - அன்புடனே, படை பயிற்ற - ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்துவரவும், பின்னர் உம் - பின்பும், குருபதி - குருகுலத்துக்குத் தலைவனான வீடுமன், வேறு ஒரு குருவை தேடினான் - (இவனினுஞ் சிறந்த) வேறோராசிரியனைத் தேடுபவனானான்; மதி - சந்திரன், இருள் அற நிலவு எறித்தது ஆயின்உம் - இருளொழியும்படி (தனது) ஒளியை வீசிவந்ததாயினும், இ பரவை ஞாலம் - கடல்சூழ்ந்த இந்நிலவுலகம், பரிதியை நயக்கும் - (அச்சந்திரனினும் மிக்க வொளியையுடைய) சூரியனை விரும்பு மன்றோ! (எ-று.) - இச்செய்யுள் - எடுத்துக்காட்டுவமை. (305) வேறு
32.- இதுவும், அடுத்த கவியும் - துரோணன்வரலாறு. பரத நாத வேத பரத்து வாச னென்பான் விரத வேள்வி தன்னின் மேன கையா லான சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில் வரத னொருவன் வந்தான் வசிட்ட முனியை யொப்பான். |
(இ-ள்.) பரதம் - தாளவகையோடு சம்பந்தமுடைய, நாதம்- இசையோடுபொருந்திய, வேதம் - வேதங்களைவல்ல, பரத்துவாசன் என்பான் - பரத்துவாச னென்னும் முனிவன், விரதம் வேள்வி தன்னில் - விரதானுட்டானத்தோடு கூடிய யாகஞ் செய்துகொண்டிருக்கையில், மேனகையால் - மேனகையென்னுந் தேவமாதைக்கண்டு காமுற்றதனால், ஆன - ஆகிய, சுரத தாது - இன்பமயமான வீரியம், வீழ்ந்த - விழப்பெற்ற, துரோணகும்பந்தன்னில் - பதக்களவு கொண்டதொரு பாத்திரத்தினின்று, வசிட்டமுனியை ஒப்பான் |