பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்165

37.-இதுமுதல் ஒன்பது கவிகள் - ஒருதொடர்: துருபதன்
செய்தியைத் துரோணன் வீடுமனுக்குக் கூறல்.

வேதமுனிவனிருந்த வேத்துமுனியைநோக்கிப்
பூதந்தன்னினிகழ்ந்த புன்மைமொழியொன்றுரைப்பான்
ஏதமெய்பெற்றனைய யாகசேனனென்பான்
போதமில்லானென்பாற் பூட்டுநண்புபூண்டான்.

     (இ-ள்.) வேதம் முனிவன் - வேதம்வல்ல அந்தணனாகிய துரோணன்,
இருந்த வேந்து முனியை நோக்கி - (தனது) அருகிலிருந்த ராசருஷியான
வீடுமனைநோக்கி, பூதந்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் -
கழிந்தகாலத்தில் நடந்த எளிமையைப் புலப்படுத்தும் ஒருசொல்லைச்
சொல்பவனானான்:- ஏதம் மெய் பெற்று அனைய - தீமைதானே ஒருவடிவ
மெடுத்தாற் போன்ற, யாகசேனன் என்பான் - யாகசேன னென்னும்
பெயரினனான, போதம் இல்லான் - அறிவில்லாதவன், என்பால் - என்னிடத்தில்,
பூட்டும் நண்பு பூண்டான் - தொடர்பையுண்டாக்கும் நட்பைப்பொருந்தினான்;

     யாகசேனன் - பாஞ்சாலதேசத்து அரசன்: துருபதனென்னும்
மறுபெயருடையவன்; சோமகனது மகனான பிருஷதனென்பவனது குமாரன்.
பரத்துவாசமகாமுனிவனும் பிருஷதமகாராஜனு ஒருவர்க்கொருவர் மனங்கலந்த
நண்பராதலால், பரத்துவாசகுமாரனான துரோணனிடத்துப் பிருஷத குமாரனான
துருபதன் இளமையில் நண்புகொண்டிருந்தானென அறிக.             (311)

38.யானுமவனுமுறையா லிளையோமானவெல்லைப்
பானுநிகர்தொல்லங்கி வேசன்பாதம்பணிந்து
வானுமண்ணும்வியக்க மறவெம்படைகள்கற்றுத்
தானும்வல்லனாகித் தன்போலென்னைவைத்தான்.

     (இ-ள்.) யான்உம் அவன்உம் - நானும் அந்த யாகசேனனும், இளையோம்
ஆன எல்லை - இளமைப்பருவமுடையோமா யிருந்தகாலத்தில், பானு நிகர்
தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து - (பிரமதேஜசினால்) சூரியன்போல
விளங்குகின்றபழைய அக்கினிவேசனென்னும் முனிவனது திருவடிகளை வணங்கி,
வான்உம் மண்உம் வியக்க - விண்ணுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் கண்டு
அதிசயிக்கும்படி, மறம் வெம் படைகள்- வலிமையையுடைய கொடிய
படைக்கலங்களை, முறையால் - முறைமைப்படி, கற்று - பயின்றுவர,-
(அவ்யாகசேனன்), தான்உம் வல்லன் ஆகி - (என்னைப்போலவே) தானும்
வல்லவனாய், தன்போல் என்னை வைத்தான் - (இராசகுமாரனாகிய) தன்னைப்
போலவே (எளியவனாகிய) என்னையும் பாவித்தான்; (எ-று.)

     அங்கிவேசன் - வடமொழித்திரிபு; இவன் அக்கினியினின்று பிறந்தவ
னென்றும், பரத்துவாச முனிவனிடமிருந்து ஆக்நேயாஸ்திரம் பெற்றுப் பின்பு
அந்த அஸ்திரத்தைத் துரோணனுக்குக் கொடுத்தன னென்றும்வடநூலால்
விளங்கும், 'சொல்லங்கிவேசன்,' 'மறைவெம்படைகள்' என்றும் பாடம்.    (312)