47.-அரசர்க்கு உரிய வரிசைகளை வீடுமன் துரோணனுக்கு அளித்தல். முனிநீ யையா விதற்கு முன்ன மின்று முதலா இனியிவ் வுலகுக் கரசா யெம்மி லொருவ னாகிக் குனிவில் வலியா லமருங் கோடி யென்று கொடுத்தான் பனிவெண் குடையு நிருபற் குரிய வரிசை பலவும். |
(இ-ள்.) 'ஐயா - சுவாமீ! இதற்கு முன்னம் முனி நீ - இதற்கு முன்பு நீ அந்தணன்: இன்று முதல் ஆ - இன்றைத்தினம் முதற்கொண்டு, இனி - இனிமேல், (நீ), இ உலகுக்கு அரசு ஆய் - இந்த இராச்சியத்துக்குத் தலைவனாய், எம்மில் ஒருவன் ஆகி - எங்களில் ஒருத்தனாய், குனி வில் வலியால் அமர்உம் கோடி - வளைந்தவில்லின் வலிமையாற் போர்செய்தலையும் மேற்கொள்வாய்,' என்று - என்று சொல்லி, (வீடுமன் துரோணனுக்கு), பனி வெள்குடைஉம் - குளிர்ச்சி தரும் வெண்கொற்றைக் குடையையும், நிருபற்கு உரிய வரிசை பல உம் - (மற்றும்) அரசர்க்கு உரிய பல சிறப்புச் சின்னங்களையும், கொடுத்தான்-; (எ-று.) 'மாணாக்கரது உடைமை யெல்லாம் குருவுக்கு உரியன' என்ற கருத்தால், 'இவ்வுலகுக்கு அரசாய்' என்றான். 'குருகுலத்தவர்க்கு இராச்சியம் முதலிய செல்வம் எவ்வளவு உண்டோ அவ்வளவுக்கும் நீயே அரசன்' என்று வீடுமன் துரோணனுக்கு உபசாரமொழிகூறினதாக முதனூல் கூறுவதையும் உணர்க. வரிசை பல - தேர், கொடி விருது, கழல் முதலியன. "படையுங்கொடியும் குடையும் முரசும், நடை நவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும்... செங்கோலரசர்க்குஉரிய" என்றது காண்க. (321) வேறு. 48.- கௌரவபாண்டவர் அன்றுமுதல் துரோணனிடம் கல்விதேர்தல். அன்றுமுத லாகவரி வெஞ்சிலைமு தற்படைக ளானவைய னைத்து மடைவே, தொன்றுபடுநூன்முறையின்மறையினொ டுதிட்டிரசுயோ தனர்களாதியெவரும், ஒன்றியது ரோணனரு ளாலும்வலி யாலுமுயருணர்வுடைமை யாலு முதலே, நின்றகுறையாலுமொருவர்க்கொருவர்கல்வியினிரம்பினர் வரம்பினிதியோர். |
(இ-ள்.) வரம்பு இல் நிதியோர் - எல்லையில்லாத செல்வங்களை யுடையவர்களான, உதிட்டிர சுயோதனர்கள் ஆதி எவர்உம் - தரும புத்திரனும் துரியோதனனும் முதலிய ஐவரும் நூற்றுவரும்,- அன்று முதல் ஆக - அந்த நாள் முதலாக, ஒன்றிய துரோணன் அருளால்உம் - (தங்களிடத்துப்) பொருந்திய துரோணசாரியனது கருணையினாலும், வலியால்உம் - (தங்கள்) உடல் வலிமையாலும், உயர் உணர்வு உடைமையால் உம் - (தாங்கள்) சிறந்த இயற்கை யறிவை யுடைமையாலும், முதல்ஏ நின்ற குறையால்உம் - முற்பிறப்பிலே கற்றுநின்ற சேஷத்தாலும்,- வரி வெம்சிலைமுதல் படைகளானவை அனைத்துஉம் - கட்டமைந்த பயங்கரமான வில் முதலிய ஆயுதங்க |