பக்கம் எண் :

178பாரதம்ஆதி பருவம்

வகையான், மாற்றினர்பிளந்துபெருவண்மைசிறுநுண்மைசலநிச்சல
மெனச்சொல்வகையே.

     (இ-ள்.) ஆற்றின் வழுவா - நல்நெறியில் தவறாத, மனுமுறை  மநுதர்ம
சாஸ்திரத்திற் சொல்லப்பட்ட நீதியையுணர்ந்த, தருமன் மைந்தன் -
தருமபுத்திரன், முதல் ஆகிய - முதலான, குமாரர் - குரு குல குமாரர்கள்,
அடைவே - முறையே,- அடல் ஆசிரியர் இருவரை உம் - வலிமையையுடைய
(கிருபன் துரோணன் என்னும் தமது) ஆசிரியர் இருவரையும், போற்றி வணங்கி,
அன்பின் - அன்போடு, உயர் பூசை பல செய்து - சிறந்த பூசைகள்
பலவற்றைச்செய்து, புரி நாண் ஏற்றிய சராசனம் வணக்கி - முறுக்குள்ள
நாணியை ஏற்றும்படி வில்லை வளைத்து, வடி வாளியின்  - கூரிய
அம்புகளைக்கொண்டு, பெருவண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்
வகை இலக்கம் அவை நால்உம் - பெருவண்மையும்சிறு நுண்மையும் சலமும்
நிச்சலமும் என்று சொல்லப்பட்ட நான்குவகை லக்ஷியங்களை யெல்லாம்,
வகையால் பிளந்து மாற்றினர் - (அதற்குஉரிய) வகைப்படி பிளந்து
தள்ளினார்கள்; ( எ-று.)

     பெருவண்மை - மிகப்பெரிய இலக்கு. சிறுநுண்மை - மிகச்சிறிய இலக்கு.
சலம் - அசையும் இலக்கு. நிச்சலம் - அசையாத இலக்கு. அம்பைக்
கையாளும்வகை - எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் மீட்டல் என நான்கு: இனி,
மேனோக்கியெய்தல் நேரேயெய்தல் எனச் சில வகைகளும் கூறுப.
'நாலுவகையான்' என்று பிரதிபேதம்.                             (330)

57.-மற்றும் படைக்கலத்திறமும், யானைதேர்குதிரை
நடத்துந்திறமுங் காட்டுதல்.

ஆயுதமநேகவிதமானவையெனைப்பலவு மழகுறவியற்றியுமதம்
பாயுமிபமாவிரதம்வாசியொருவர்க்கொருவர் பலகதிவரக்கடவியும்
சேயுயருமாடநிலைதெற்றியினிருந்தவர் தெளிந்துளமகிழ்ந்துநவைதீர்
வாயுகதியல்லதுமனித்தர்கதியல்லவென வல்லனபுரிந்தனரரோ.

     (இ-ள்.) எனை அநேகவிதம் ஆனவை - மற்றும் பலவகைப்பட்டவையான,
ஆயுதம் பலஉம் - படைக்கலங்களை யெல்லாம், அழகு உறஇயற்றிஉம் -
அழகாக உபயோகித்தும்,- சேய் உயரும் - மிகவும் உயர்ந்துள்ள, மாடம் நிலை
- மாளிகைகளின் உபரிகைகளிலும், தெற்றியின் - மண்டபங்களிலும், இருந்தவர் -
(இக்காட்சி காண்டற்கென்று) வந்திருந்தவர்கள், தெளிந்து - கண்டு, உளம்
மகிழ்ந்து-, நவை தீர் வாயு கதி அல்லது மனித்தர் கதி அல்ல என - (இக்கதி
விசேடங்கள்) குற்றமற்ற வாயுவுக்குஉரிய கதிகளே யல்லது மனிதர்களுக்கு உரிய
கதிகளல்லவென்று சொல்லும்படி,- மதம்பாயும்இபம் - மதசலம் பெருகப்பெற்ற
யானைகளையும், மா இரதம் - பெரிய தேர்களையும்,  வாசி - குதிரைகளையும்,
ஒருவர்க்கு ஒருவர் - ஒருவரினும் ஒருவர் மிகுதியாக, பல கதி வர -
அநேகவிதமான நடைவிகற்பங்கள் உண்டாக, கடவிஉம் - செலுத்தியும்,- வல்லன
புரிந்தனர் - (தாம்) தேர்ந்த கல் வித்திறங்களைச் செய்து காட்டினார்கள்; (எ-று.)-
அரோ - ஈற்றசை.