குபேரன் முன்னொருகாலத்தில் கைலாசகிரியின் ஒருசாரலிலிருந்து பெருந்தவஞ்செய்து சிவதரிசனம்பெற்று அப்பிரானருளால் அவனுக்கு நண்பனாயினன். கொடையாளியாகுங்கர்ணனுக்கு - தனதனாகியகுபேரனும், கர்ணனுக்கு அரசு அளித்த ராசராசனான துரியோதனனுக்கு - குபேரனுக்கு வரமளித்த தலைவனான சிவபிரானும் உவமை. முறைநிரனிறைப்பொருள்கோள். (346) 73.-கௌரவ பாண்டவர்களது திறங்கண்டு துரோணன் மகிழ்தல். ஆனகாலையெண்ணுகின்ற வாயுதங்கள்யாவையும் யானைவாசியிரதமான யானமுள்ளயாவையும் சேனையோடுதெவ்வரைச்செகுக்கவல்லவீரமும் மானவீரர்வல்லரென்று மறைவலாளன்மகிழ்வுறா. |
இதுவும், மூன்று கவியும் - குளகம். (இ-ள்.) ஆனகாலை - (இவையெல்லாம்)நிகழ்ந்த அப்பொழுது,- மறைவலாளன் - வேதம்வல்லவனான துரோணாசாரியன்,- எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவைஉம் - எண்ணப்படுகிற படைக்கலங்களெல்லாவற்றிலும், யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவைஉம் - யானை குதிரை தேர் ஆகிய வாகனங்களாயுள்ளவை எல்லாவற்றிலும், சேனையோடு தெவ்வரை செகுக்கவல்ல வீரம் உம் - சேனையுடனே பகைவர்களை யழிக்கவல்ல வீரத்திலும், மானம் வீரர் - மானத்தையுடைய இந்தவீரர்கள், வல்லவர் - தேர்ந்தவர், என்று-, மகிழ்வு உறா- மகிழ்ச்சியடைந்து,- (எ-று)- 'இயம்ப' (75) என்ற எச்சத்தைக் கொள்ளும். ஆயுதங்கள்என்றது - அவற்றை உபயோகித்தலையும், யான மென்றது - அவற்றைச் செலுத்துதலையுங்குறிக்கும்: இலக்கணை. (347) 74.-துரோணன் அவர்களிடம் தனக்குஉரிய குருதட்சிணை இன்னதெனல். வம்மினாதிகுருகுலந் தழைக்கவந்தமைந்தர்காள் தம்மினாளையேயெமக் களிக்கநின்றதக்கிணை எம்மினானொருத்தன்வேறி யாகசேனனென்றுளான் நும்மினாடியவனையிம்பர் நோதல்செய்துகொணர்மினே. |
(இ-ள்.) ஆதி குருகுலம் தழைக்கவந்த மைந்தர்காள்- முதன்மை பெற்ற குருகுலம் செழிப்படையும்படி வந்துதோன்றிய குமாரர்களே!-வம்மின் - வாருங்கள்: எமக்கு அளிக்க நின்ற தக்கிணை - எமக்கு (நீங்கள்) கொடுக்கும்படியுள்ள குருதட்சிணையை, நாளைஏ தம்மின்- நாளைக்கே தாருங்கள்: (அத்தக்கிணை), வேறு- வேறு வகைத்து; (அது என்னவெனின்),- யாகசேனன் என்று எம் இனான் ஒருத்தன் உளான் - யாகசேனனென்று எம்பகைவனொருவன் இருக்கிறான்; அவனை-, நும்மில் நாடி - உங்களுள் (யாவரேனும்) சென்று, நோதல் செய்து - (கொல்லாமல்) வருத்தி [போரில் உயிருடனே தேரோடு பிணித்து], இம்பர் கொணர்மின் - இவ்விடத்திற்குக் கொண்டுவாருங்கள்: (இவ்வளவே); (எ -று.)- 'என்றுஇயம்ப' என அடுத்த கவியோடு தொடரும். |