தக்கிணை=தக்ஷிணா: வடசொல். இனான் = இன்னான்: இனியவனல்லாதவனென்று பொருள். நாளையே என்றது, விரைவு குறித்தற்கு. (348) 75.- அதனைமுடித்தற்கு அக்குமாரர்கள் பாஞ்சாலநாடு செல்லுதல். என்றுதஞ்சிலைப்புரோகி தன்கனன்றியம்பவே அன்றவன்பதம்பணிந் தளித்தசொற்றலைக்கொளா வென்றிநீடுபடைகளோடும் விரவுமங்கநாலொடும் சென்றுதங்கணாடகன்று தெவ்வுநாடுகுறுகினார். |
(இ-ள்.) என்று-, தம் சிலை புரோகிதன் - தங்கள் வில்லாசிரியனாகிய துரோணன், கனன்று இயம்ப - (யாகசேனன்மீது) கோபங்கொண்டு சொல்ல,- (அக்குருகுல குமாரரனைவரும்), அன்று- அப்பொழுது, அவன் பதம் பணிந்து - அத்துரோணனது பாதங்களை வணங்கி [விடைபெற்று], அளித்த சொல் தலைக் கொளா - (அவன்) கட்டளையிட்டருளிய வார்த்தையைத் தலைமேற்கொண்டு [மிகவும் நன்குமதித்து], வென்றி நீடு படைகளோடுஉம் - வெற்றி மிக்க ஆயுதங்களோடும், விரவும் அங்கம் நாலொடுஉம் - பொருந்திய சதுரங்க சேனையோடும், சென்று - புறப்பட்டு, தங்கள் நாடு அகன்று - தங்களுடையகுருநாட்டை நீங்கி, தெவ்வு நாடு குறுகினார் - (தமது குருவுக்குப்பகைவனாதலால் தமக்கும்) பகைவனான யாகசேனனது பாஞ்சாலதேசத்தைச்சமீபித்தார்கள்; (எ-று.)- அங்கம் நால் - யானை தேர் குதிரை காலாள். தங்கள்நாடு - குருநாடு. 'தெவ்வனாடு' என்றும் பாடம். (349) 76.- அக்குமாரர்கள் பாஞ்சாலனரண்மனையை முற்றுகை செய்தல். ஆளிமொய்ம்பரம்முனைக்க ணானபோதனீகினித் தூளிகண்புதைத்தசென்று செவிபுதைத்ததுவனிபோய் ஓளிகொண்டசெம்பொன்வெற்பி னுடல்புதைத்தவெழிலிபோல் வாளிகொண்டவிருதர்மா மதிற்புறம்புதைக்கவே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) ஆளி மொய்ம்பர் - சிங்கம்போலும் வலிமையுடையவர்களாகிய அக்குமாரர்கள், அ முனைக்கண் ஆன போது - போர்செய்தற்குரிய அவ்விடத்திலே சென்று சேர்ந்தபொழுது,- அனீகினி தூளி - (அவர்களுடைய) சேனையால் மேலெழுப்பப்பட்ட (பூமியின்) துகள், சென்று - முன்சென்று கண் புதைத்த - (யாகசேனனது) கண்களை மறைத்தன: துவனி - (சேனையின்) போராரவாரங்கள், போய் - முன்சென்று, செவி புதைத்த - (அவனது) காதுகளை அடைத்தன; (பின்பு), செம் பொன் வெற்பின் உடல் புதைத்த - சிவந்த பொன்மயமான மேருமலையின் வடிவை மூடிய, ஓளிகொண்ட எழிலி போல் - வரிசைப்பட்ட மேகங்கள் போல, வாளிகொண்ட விருதர் - அம்பு கைக்கொண்ட (அக்குருசேனை) வீரர்கள், மா மதில் புறம் புதைக்க - (அவ் யாகசேன நகரத்தின்) பெரியமதிலில் வெளியிடத்தை நெருங்கிச் சூழ்ந்திட,- (எ- று.)- "வளைத்த" என வருங்கவியோடு தொடரும். |