பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்197

89.-நாடெங்கும் விழாக்கொண்டாடுதலும்,
திசைவிளங்குதலும்.

சங்கச்சங்கமிகமுழங்கச் சாந்தும்புழுகுமெறிந்தார்த்துத்
துங்கக்கொடியுந்தோரணமுந் தொடையும்பரப்பிச்சோமகனாடு
அங்கட்சயந்தனவதரித்த வமராவதிபோலார்வமெழத்
திங்கட்குழவியுற்பவித்த திசைபோன்றனவெண்டிசையெல்லாம்.

     (இ-ள்.) சோமகன் நாடு - சோமககுலத்தானான யாகசேனனது
பாஞ்சாலதேசம்,- சங்கம் சங்கம் மிக முழங்க - சங்குக்கூட்டங்கள்
மிகுதியாகஒலிக்க, சாந்துஉம் புழுகுஉம் எறிந்து ஆர்த்து - சந்தனக் குழம்பையும்
புழுகெண்ணெயையும் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரித்து, துங்கம்
கொடிஉம் தோரணம்உம் தொடைஉம் பரப்பி - உயர்ந்த துவசங்களையும்
தோரணங்களையும் மாலைகளையும் மிகுதியாக அமைத்து (அலங்கரித்து), அம்
கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் - அழகிய கண்களையுடைய
சயந்தன் [தேவேந்திர குமாரன்] அவதரிக்கப்பெற்ற அமராவதிநகரம்போல,
ஆர்வம் எழ - அன்பு மிக,- எண் திசை எல்லாம் - எட்டும்
திக்குகள்முழுவதும், திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன - இளம்பிறை
உதிக்கப் பெற்ற திக்குக்கள்போலத் தாமாக விளங்கின; (எ -று.)

     இந்திரகுமரன் பிறந்தபொழுது அமராவதிநகரத்தில் தேவர்கள் களிப்புற்று
விழாக்கொண்டாடியதுபோல, துருபதகுமாரன் தோன்றியபொழுது
பாஞ்சாலநகரத்துச்சனங்கள் மகிழ்ச்சிமிக்கு விழாக் கொண்டாடினரென்பது
மூன்றாமடியின்கருத்து. சாந்தும் புழுகும் போல்வனவற்றை மகிழ்ச்சிக்களிப்பால்
ஒருவர்மேல் ஒருவர் தூவி உத்ஸவங் கொண்டாடுதல் இயல்பு. சங்கம் என்பது -
சங்கைக் குறிக்கும்போது சங்கமென்றவடசொல் திரிந்ததும், கூட்டத்தைக்
குறிக்கும்போது ஸங்க மென்ற வடசொல் திரிந்ததுமாம்.            (363)

90.-பின்பு திரௌபதி தோன்றுதல்.

பின்னுங்கடவுளுபயாசன் பெருந்தீப்புறத்துச்சுருவையினால்
மன்னுங்கடலாரமுதென்ன வழங்குசுருதியவிநலத்தான்
மின்னுங்கொடியுநிகர்மருங்குல் வேய்த்தோண்முல்லைவெண்முறுவல்
பொன்னும்பிறந்தாள் கோகனகப் பூமீதெழுந்தபொன்போல்வாள்.

     (இ-ள்.) பின்னும் - அதன்பின்பும், கடவுள் உபயாசன் - தெய்வத்
தன்மையையுடைய உபயாசனென்னும் அம்முனிவன், பெருந் தீப்புறத்து- பெரிய
யாகாக்கினியிலே, சுருவையினால் - சுருவை யென்னும்
ஓமத்துடுப்புக்கருவியைக்கொண்டு, மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு -
பெருமைபொருந்திய பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம்போல
ஆகுதிசெய்த [மிகஇனியதேவருணவாகிய], சுருதி அவி - வேதமுறைமை தவறாத
அவிர்ப்பாகத்தினது, நலத்தால் - நற்பயனால்,- மின்உம் கொடிஉம் நிகர்
மருங்குல் - மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும், வேய்
தோள் - மூங்கில் போன்ற தோள்களையும், முல்லை வெள் முறுவல் -
முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய, பொன்உம் -
பொன்போல்