ராட்டிரன்), 'இந்து குலத்தோய்- சந்திரகுலத்தவனே! ஐயா-! மனு நீதியில் நின்றிலை - மனுதர்மசாஸ்திரத்திற்கூறப்பட்ட நீதி முறைமையில் நீ நின்றாயில்லை; பொன்றிய எம்பி பதம் - இறந்துபோன எமது தம்பியான பாண்டுவுக்கு உரியதாயிருந்த இராச்சியத்தை, அரசு ஆளுதல்-, புதல்வர்க்குஏ அன்றி - அவன்பிள்ளைகளான பாண்டவர்க்கே யல்லால், நுமக்கு - (என்மக்களான) உங்கட்கு, ஆம்ஓ - தகுமோ? (எ-று.)- இக்கவியில், 'என்றலும்', 'மைந்தனை' என்றவை 'என்றான்' (101) என்றமுற்றைக் கொள்ளும். ஆல் - ஈற்றசை. தான் பாண்டுவினும் மூத்தவனாயினும் 'மூத்தவன் அங்க வீனம் முதலிய குறைபாடுடையவனா யிருந்தால் அரசுரிமை அவனை விட்டு அவன் தம்பியைச் சாரும்' என்ற நீதிநூல் முறைமைப்படி, அரசாட்சி பிறவிக்குருடனான தனக்கு உரியதன்றித் தன் தம்பியான பாண்டுவுக்கே உரியதானதனால், திருதராட்டிரன் 'பொன்றியவெம்பிபதம்' என்றான். தொன்றுதொட்டு உலகத்தில் மிகப்பிரசித்தமான சந்திரகுலத்திற் பிறந்திருந்தும் இராசாங்கநீதிமுறையில் நீ நிலை நின்று பேசினாயில்லை யென்ற இழிவு விளங்க, 'இந்துகுலத்தோய்! மனுநீதியில் நின்றிலை' என்றான். (374) 101. | நீதியிலாநெறி யெண்ணினைநீயிங்கு ஓதியவாய்மையி னுறுபொருளின்றால் ஆதிபராயவ ரைவருநீரும் மேதினியாளுதல் வேத்தியல்பென்றான். | (இ-ள்.)நீ-, நீதி இலா நெறி - நியாயமில்லாத வழியை, எண்ணினை - நினைத்தாய்: இங்கு ஓதிய வாய்மையின் - (அவ்வாறு எண்ணி) இப்பொழுது (நீ) சொன்ன வார்த்தையில், உறு பொருள் இன்று - பொருந்திய சாரமொன்றும் இல்லை; (ஆகவே இனி), ஆதிபர் ஆயவர் ஐவர்உம்- (அரசாட்சிக்குத்) தலைவர்களான அப்பஞ்சபாண்டவர்களும், நீர்உம் - நீங்களும், (ஒற்றுமைப்பட்டு, மேதினி ஆளுதல் - பூமியை ஆளுதலே, வேந்து இயல்பு - இராசநீதிமுறைமை, ' என்றான் - என்று கூறினான்; (எ-று.)- வேத்தியல்பு. மென்றொடர் வன்றொடராயிற்று. (375) 102.- அதனை மறுத்துத் துரியோதனன் கூறுதல். இகன்மிகுகன்னனு மென்னிளையோரும் சகுனியுமுண்டு தகுந்துணைநெஞ்சில் உகவையிலாரொ டுறேனினியென்றே முகமுகுரம்புரை முதலொடுசொன்னான். |
(இ-ள்.) இகல் மிகு - வலிமைமிக்க, கன்னன்உம் - கர்ணனும், என் இளையோர்உம் - எனது தம்பிமார்களும், சகுனிஉம் - (என்மாமனான) சகுனியும் ஆகிய, தகும் துணை - தக்க துணை, உண்டு - (எனக்கு) உண்டு; (ஆதலால், யான்), நெஞ்சில் உகவை இலாரொடு இனி உறேன்-மனத்தில் (என்பக்கல்) நண்பில்லாத அப்பாண்டவர்களோடு இனிச் சேரமாட்டேன், என்று-, முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான்-முகம் கண்ணாடியையொத்த தனது தந்தையான திருதராட்டிரனுடனே (துரியோதனன்) கூறினான்; (எ-று.) |