பக்கம் எண் :

206பாரதம்ஆதி பருவம்

திரி - நடுவுநிலைமையில்லாத புரோசநனென்னும் பேருள்ள அறிவுடைய
மந்திரியை, வருக என - வருவாயாகவென்று அழைக்க, வந்தான் - (அவன்
அருகில்வந்து) சேர்ந்தான்; (எ -று.)

     பொதுமை - பகைவர் நண்பர் அயலார் என்னும் முத்திறத்தாரிடத்தும்
தருமத்தின் வழுவாமல் ஒப்பநிற்கும் நிலைமை. 'மதியுடைமந்திரி' என்றது,
வஞ்சனையாகத்தொழில் செய்தற்குஉரிய தந்திரங்களை அறிந்தவ னென்றவாறு.
                                                             (381)

108.-திருதராட்டிர துரியோதனர் புரோசனனுடன்
சதியாலோசனை செய்தல்.

வந்த வமைச்சனு மைந்தனு மற்றத்
தந்தையு மங்கொரு தனிவயி னெய்திச்
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர்
குந்தி மகாருயிர் கோடல் புரிந்தே.

     (இ-ள்.) வந்த அமைச்சன்உம் - வந்த மந்திரியான புரோசனனும்,
மைந்தன்உம் - இராசகுமாரனான துரியோதனனும், அ தந்தைஉம் - அவன்
தந்தையான திருதராட்டிரனும், தீமைமனத்தோர் - கொடிய மனத்தை
யுடையவர்களாய், அங்கு ஒரு தனிவயின் எய்தி - அவ்விடத்தில்
[அரண்மனையில்] ஏகாந்தமான ஓரிடத்தை யடைந்து, குந்தி மகார் உயிர்
கோடல்புரிந்து - பாண்டவர்களுடைய உயிரைக் கொள்ளவிரும்பி,
சிந்தனைசெய்தனர்-;

     நகுலசகதேவர்களையும் சேர்த்து 'குந்திமகார்' என்றது குந்தி மாத்திரிக்குச்
சொல்லிக்கொடுத்த மந்திரத்தின் பலத்தினாலேயே அவ்விருவரும் பிறந்தன
ராதலாலும், குந்தியேவளர்த்து வந்தன ளாதலாலுமாம். மற்று - அசை.   (382)

வேறு.

109.-இரண்டுகவிகள் - குளகம். அவர்கள் செய்த
துராலோசனைமுடிவு.

ஆர ணாதிப ராரும் புகழ்வது
நார ணாதியர் நண்ணுஞ் சிறப்பது
தோர ணாதி துலங்குபொற் கோபுர
வார ணாவத மாநக ரங்கணே.

     (இ-ள்.) ஆரண அதிபர் ஆர்உம் புகழ்வது - வேதங்கட்குத்
தலைவர்களான அந்தணர்களெல்லோராலும் புகழப்படுவதும், நாரண ஆதியர்
நண்ணும் சிறப்பது - திருமால் முதலிய தேவர்கள் எழுந்தருளிவாழும்
மகிமையையுடையதும், தோரண ஆதி துலங்கு - தோரணம் முதலியவை
விளங்கப்பெற்றதும், பொன் கோபுரம் - பொன்னாலாகிய
கோபுரத்தையுடையதுமான, வாரணவதம் மாநகர் அங்கண்ஏ -
வாரணவதமென்னும் பெரிய நகரத்தினிடத்திலே,- (எ-று.)- 'சென்றிருக்கத்
திருவாய்மலர்க' என அடுத்தகவியோடு தொடரும். வாரணாவதம் - காசியென்ப.

     இதுமுதல் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.                       (383)