பக்கம் எண் :

234பாரதம்ஆதி பருவம்

தலைமேற் கொண்டு கௌரவித்தான்: (பின்பு அவர்களெல்லோரும்), மின்னைஉம்
உடன் கொடுபோந்து - மின்னல் போன்ற இடிம்பையையும் உடனழைத்துக்கொண்டு
சென்று, மேவு நீர் தன்னைஉம் கண்டு - (அங்குப்) பொருந்திய ஒரு நீர்நிலையையும்
கண்டு, அதில் துளைந்து - அதில் மூழ்கி, (அதன்கரையில்), தங்கினார்-; (எ-று.)

     கீழ்ச் சூரியோதயங் கூறினவர், இங்கு, அவர்கள் காலைக் கடன் முடித்தல்
கூறின ரென்க. நீராடியது கூறினமை, மற்றைக் கடமைகளுக்கும் உபலக்ஷணமாம்.
இடிம்பனைக்கொன்று இடிம்பையைப் பெற்றபின் சாலிகோத்திரசரஸைப் பாண்டவ
ரடைந்தன ரென்று நூல்கள் கூறும்.                                 (434)

25.- அங்கு வியாசமுனி எழுந்தருள, பாண்டவர் உபசரித்தல்.

அத்தினத்தவர்வயி னவலநீக்குவான்
மெய்த்தவப்பழமறை வியாதன்வந்தனன்
பத்தியிற்சிறுவரும் பணிந்துபோற்றினார்
முத்திபெற்றவரினு முற்றுஞ்சிந்தையார்.

     (இ-ள்.) அ தினத்து - அந்நாளில், அவர்வயின் அவலம் நீக்குவான் -
அவர்களுக்குநேர்ந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டு, மெய் தவம்
பழமறைவியாதன் வந்தனன் - உண்மையான தவத்தை யுடையவனும் பழமையான
வேதங்களை வகுத்தருளியவனு மாகிய வியாசமுனிவன் (அங்கு) வந்தருளினான்;
(அதுகண்டு), சிறுவர் உம் - இளம்பிள்ளைகளான பாண்டவர்களும், முத்தி
பெற்றவரின் உம் முற்றும் சிந்தையார் - மோக்ஷமடைந்தவர்களினும் (ஆனந்தம்)
மிக்கமனத்தையுடையவர்களாய், பத்தியின் பணிந்து போற்றினார் - பக்தியோடு
(அவனை) வணங்கித் துதித்தார்கள்; (எ-று.)

     அவலம் நீக்குதல் - துரியோதனனது சூழ்ச்சியால் நேர்ந்த
மனவருத்தத்தைத் தணித்தல். மெய்த்தவம் - ஒழுக்கத்திலும் பயனிலும் தவறாத
தவம். 'முந்துஞ் சிந்தையார்' என்றும் பாடம்.                     (435)

26.- வியாசன் பாண்டவர்க்குக் கூறிய நன்மொழி.

தனிவனமிகந்துநீர் சாலிகோத்திர
முனிவனஞ்சிலபகல் வைகிமுந்துற
மனனுறப்பார்ப்பன மாக்களாகியே
இனிமையின்வேத்திர கீயமெய்துவீர்.

             இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) நீர் - நீங்கள், தனி வனம் இகந்து - தனிமையான காட்டைக்
கடந்து, முந்துற - முந்தி, சாலிகோத்திர முனி வனம் சில பகல் வைகி -
இங்குள்ளசாலிகோத்திரனென்னும் முனிவனது வனத்தில் சிலநாள் இருந்து,
(பின்பு), மனன் உற பார்ப்பனமாக்கள் ஆகி - (கண்டார் எவரும்) மனத்தால்
நம்பும்படி பிராமண வேடங்கொண்டு, வேதத்திரகீயம் இனிமையின் எய்துவீர் -
வேத்திரகீயத்தை இனிது சேர்வீராக; (எ-று.)

     தனிவனம் - மநுஷ்யசஞ்சார மில்லாத வனம், துரியோதனாதியரால் இன்னா
ரென்று அறிந்து இடரிழைக்க வொண்ணாதபடி