இவனுக்குப் பெயரிடப்பட்டதென்று வடநூல் கூறும். 'இருட்பிழம்பென்ன நீண்டு' என்று அவனது கரியபெரியவடிவுக்கு உவமைகூறினார். (440) 31.- கடோற்கசன் பாண்டவரை வணங்குதல். காதியதிறல்நர காசுரன்றனை ஆதிவெங்கோலமன் றளித்தவாறுபோன் மேதினிமதித்தபோர் வீமனல்கிய சோதியம்புதல்வனுந் தொழுதுசொல்லுவான். |
(இ-ள்.) வெம் ஆதி கோலம் - வெவ்விய ஆதிவராகமூர்த்தி, காதிய திறல் நரகாசுரன்தனை - (அனைவரையும்) தாக்கியழிக்கவல்ல வலிமையையுடைய நரகாசுரனை, அன்று - அக்காலத்தில் [முன்பு] அளித்த ஆறுபோல் - பெற்ற விதம்போல, மேதினி மதித்த போர் வீமன் நல்கிய - பூமியிலுள்ளோர் யாவரும் கொண்டாடும் போரையுடைய வீமன்பெற்ற, சோதி அம் புதல்வன்உம் - ஒளியையுடைய புத்திரனான கடோற்கசனும், தொழுது சொல்லுவான் - (பாண்டவர்களை) வணங்கி (அவரைநோக்கிச்) சொல்லுவான்; (எ -று.)- அதனை, அடுத்த கவியிற் காண்க. பிரளயசலத்தில் முழுகியிருந்த பூமியைத் திருமால் வராகாவதாரஞ்செய்தருளிக் கோட்டு நுனியாலே யெடுத்தபொழுது அத்திருமாலினது பரிசத்தாற் பூமிதேவியினிடம் ஒரு குமாரன் பிறந்தனனென்றும், அஸமயத்திற் சேர்ந்து பெறப்பட்டதனால் அவன் அசுரத்தன்மைபூண்டு நரகனென்று பெயர்பெற்று எல்லாப் பிராணிகளையும் மிகவும் வருத்திவந்தன னென்றும், பின்பு அவனைத் திருமால்தானே க்ருஷ்ணாவதாரத்திற்கொன்றருளின னென்றும் உணர்க. முன்னொருகாலத்திற் சிவபிரான் அளித்த வரத்தின்படி, இராக்கத ஸ்திரீகளுக்குப் பிறக்கும் பிள்ளைகள் பிறந்தபொழுது தாயினவ்வளவு பருவவளர்ச்சியுறுதலால், கடோத்கசன் பிறந்தவுடனே பாண்டவரைத்தொழுது பேசுவானாயினனென அறிக. சோதியம் புதல்வன், அம் - சாரியை. (441) 32.-பாண்டவரிடம் விடைபெற்றுக் கடோற்கசனும் இடிம்பியும்சேறல். நிறையுடைத்தந்தையர் நீர்நினைத்தபோது உறைவிடத்தெய்தியாங் குரைத்தசெய்குவேன் இறைவரிப்பணிவிடை தருகென்றேகினான் பிறையெயிற்றியாயொடும் பெற்றபிள்ளையே. |
(இ-ள்.) 'நிறை உடை தந்தையர் - நற்குணநிறைவையுடைய தந்தையர்களே! நீர் நினைத்த போது - நீங்கள் (என்னை) நினைக்கும் பொழுது, உறைவு இடத்து எய்தி - (நீங்கள்) வசிக்குமிடத்தில் (நான்) வந்து, ஆங்கு உரைத்த செய்குவேன் - அவ்விடத்து (நீங்கள்) சொன்னவற்றைச் செய்வேன்; இறைவர் - தலைவர்களே! இ பணிவிடை தருக - இந்தக்கட்டளையையும் விடையையும் (எனக்குத்) தந்தருள்வீராக', என்று - என்றுவேண்டி,- பிறை எயிறு யாயொடுஉம் - பிறைச்சந்திரன் போன்ற கோரதந்தங்களையுடைய |