இதுமுதற் பதின்மூன்றுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரியச்சந்தவிருத்தங்கள், தனன தன தன தனன தனதன தனன தனதன தனதனா என்பது, இதுமுதல் மூன்று கவிகளுக்குச் சந்தக்குழப்பு. (448) 39.-இதுமுதல் ஆறுகவிகள் - ஒருதொடர்: 'புலம்புவானேன்?' என்று வினவிய குந்திக்குப் பார்ப்பனி பகன் செய்தியைக் கூறல். மறுகியழுவதென்மொழிகமுனிவரன் மனைவியெனவிவள்வினவலும் குறுகியவளுடனுரைசெய்குவளுறு குறையையுளநனிகுறையவே முறுகுசினவனல்பொழியும்விழியினன் முகனில்பகனெனுமுரணுடைத் தறுகணிசிசரனுளனிவ்வளநகர் தழுவும்வனனுறைதகுதியான். |
(இ-ள்.) 'முனிவரன் மனைவி - சிறந்த அந்தணனுடைய மனைவியே! மறுகி அழுவது என் - (நீ) கலங்கிப் புலம்புவதுயாதுகாரணத்தால்? மொழிக - சொல்வாயாக', என -, இவள் வினவலும் - இக்குந்தி கேட்டவளவிலே,- (அப்பார்ப்பனி), குறுகி - அருகில்வந்து, உறு குறையை - (தனக்கு) நேர்ந்த மனக்குறையை, உளம் நனி குறைய - மனம்மிகவும் மெலிய, அவளுடன் உரைசெய்குவள் - அக்குந்தியுடள் கூறுவாள்:- முறுகுசினம் அனல்பொழியும்விழியினன்- மிக்க கோபாக்கினியைச் சொரிகின்ற கண்களையுடையவனாகிய, முகன் இல் பகன் எனும் - கண்ணோட்டமில்லாத பகனென்கிற, முரண் உடை தறுகண் நிசிசரன் - வலிமையுடைய வன்கண்மையுள்ளவனாகிய இராக்கத னொருவன், இ வளம் நகர் தழுவும் வனன் உறை தகுதியான் - வளன்களையுடைய இந்த நகரத்தைச்சார்ந்த காட்டில் வசிக்கும் உரிமையுடையவனாய், உளன் - இருக்கின்றான்; முகன் - இலக்கணையாய், அன்போடு முகங்கொடுத்தலைஉணர்த்தும். இந்நகரத்தையடுத்தயமுனைக்கரையில் அரக்கன் வசிக்கின்றா னென்று பாலபாரதம் கூறும். வனன் =வனம். (449) 40. | அருளிலிதயமுநெறியில்சரிதமு மழகிலுருவமுமதிர்குரற், பொருளிலுரைகளுமுடையன்முழுதுடல் புலவுகமழ்தரு பொறியினன், மருளுநரியொடுகழுகுதொடர்தர வலியபிணநுகர்சுவையறா, திருளின்மிசையிருபிறைகளெனவளை யெயிறுநிலவெழுமி தழினான். |
(இ-ள்.) (அவ்வரக்கன்),- அருள் இல் இதயம்உம்-கருணையில்லாத மனத்தையும், நெறி இல் சரிதம்உம் - நல்வழியில்லாத ஒழுக்கத்தையும், அழகு இல் உருவம்உம் - அழகில்லாதகோரரூபத்தையும், அதிர் குரல் - முழங்குகிற கர்ச்சனையொலியையும், பொருள் இல் உரைகள்உம் - பயனில்லாத பேச்சுக்களையும், உடையன் - உடையவன்; முழுது உடல் - உடம்பு முழுவதும், புலவு கமழ் தரு - புலால் நாற்றம் வீசுகிற, பொறியினன் - அடையாளத்தையுடையவன்; மருளும்நரியொடு கழுகு தொடர்தர - (காண்பவர்மனம்) வெருளும்படியுள்ள நரிகளும் கழுகுகளும் விடாதுதொடர, வலிய பிணம் நுகர் சுவை அறாது - வலிய பிணங்களைத் தின்னும் உருசி நீங்கா |