பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்277

எனக் காணுங் கருத்தோடு ஏற்படுத்திக் கூறிய தென்பதும் விளங்கும்.
த்ருஷ்டத்யும்நனென்றபெயர் - காம்பீரியமும் பாதுகாத்தல்தொழில்வன்மையு
முடையனாய் ஆற்றல் முதலியவற்றோடு சிறப்பாகப்பிறந்தவனென்னுங் காரணம்
பற்றியதென்று வியாச பாரதம் கூறுகின்றது, 'களிற்றினான்' என்றும் பாடம்.   (505)

31.- 'குறியைத்தவறாது எய்தாற்குத் திரௌபதி
உரியள்' எனல்.

சிலையிது சிலீமு கங்க ளிவைகடுந் திரிகை வேகத்து
இலைமுகத் துழலு கின்ற வெந்திரத் திகிரி நாப்பண்
நிலையிலா விலக்கு மஃதே நெஞ்சுற யாவ னெய்தான்
கலைவலீ ரவற்கே யிந்தக் கன்னியு முரியு ளென்றான்.

     (இ - ள்.) 'கலை வலீர்-கலைஞானங்களில் வல்லவர்களே! சிலை இதுவில்
இதோஇருக்கிறது; சிலீமுகங்கள் இவை - அம்புகள் இதோ இருக்கின்றன; கடுந்
திரிகைவேகத்து - முறுக்கிவிட்டவிசையையுடைய (குயவனது) சக்கரத்தின்
வேகம்போன்றவேகத்தோடு, இலைமுகத்து உழலுகின்ற-ஆர்களின் நுனியமைந்த
விளிம்பிற்சூட்டையுடையதாய்ச் சுழலுகின்ற, எந்திரம் திகிரி - சக்கரவடிவமான
யந்திரத்தினது,நாப்பண்-நடுவிலே, நிலைஇலா - நிலைப்படாமலிருக்கிற, இலக்குஉம்
-குறியும்,-அஃதுஏ - இதோகாணப்படுகிறது; (அந்த இலக்கை), நெஞ்சுஉற
யாவன்எய்தான் - மனம்அமைய (உங்களில்) எவன் எய்துவீழ்த்துவனோ,
அவற்குஏ - அவனுக்கே இந்தகன்னிஉம் உரியள்-கன்னிகையான இத்திரௌபதியும்
உரியவளாவள், ' என்றான்-; (எ-று.)

     பதினெட்டு வித்தைகளுள்ளும், அறுபத்து நான்கு கலைகளுள்ளும்
வில்வித்தைஒன்றாதலால், அதில் தேர்ந்தவர்களேயென்று உயர்த்திவிளிப்பான்
'கலைவலீர் 'என்றான். வில்லேற்றினான் இவளை எய்துமென்றஇது, எண்வகை
மணத்துள்ஆசுரமாம். சிலீமுகம் - வடசொல்; கூர்மையுள்ள நுனியை
யுடையதென்பது பொருள்,திரிகை-திரியுந்தன்மையது. 'எய்தான்' -இயல்பினால்வந்த
காலவழுமைதி 'வேகத்திலையமொத்து' என்று பாடம்.              (506)

வேறு.

32.-இரண்டுகவிகள்-அதுகேட்டு அரசர்கள் கலங்கினும்
ஆசையொழியாமை கூறும்.

இச்சொற் பழனப் பாஞ்சாலர்க் கிறைவன் புதல்வனியம்
                                      புதல்கேட்டு
அச்சொற் றத்தஞ் செவிக்குருமே றாகக் கலங்கு மரவன்னார்
கச்சைப் பொருது புடைபரந்து கதித்துப் பணைக்குங் கதிராரப்
பச்சைக் குரும்பை யிளமுலைமேற் பரிவா னாணம் பிரிவுற்றார்.

     (இ - ள்.)  இ  சொல் - இந்தவார்த்தையை, பழனம் பாஞ்சாலர்க்கு இறைவன்
புதல்வன்- கழனிகள் சூழ்ந்த பாஞ்சாலதேசத்திலுள்ளார்க்கு அரசனான துருபதனது
குமாரனாகிய திட்டத்துய்மன், இயம்புதல் - சொல்லியதை, கேட்டு-செவியுற்று,
அச்சொல்தம் தம் செவிக்கு உரும் ஏறு ஆக கலங்கும் -அந்த வார்த்தை தம்
தம்காதுகளுக்குப் பேரிடிபோலாக (அதனாற்) கலங்கிய, அரவு