பக்கம் எண் :

284பாரதம்ஆதி பருவம்

     திலகம் நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, கண்ணன் யதுகுலத்துக்குச்
சிறப்புத்தந்தன னென்க. வசுதேவனும் தேவகியும்  கம்சனால் வடமதுரையில்
தளைபூண்டிருக்கையில் திருமால் தேவகியினிடம் எட்டாவதுகருப்பத்திற்
கண்ணனாய்அவதரிக்க, அந்தக் குழந்தையைக் கம்சன் கொல்லக்கூடுமென்கிற
அச்சத்தால்தாய்தந்தையர் அத்தெய்வக்குழவியின் அனுமதிபெற்று அந்தச் சிசுவை
அதுபிறந்தநடுராத்தியிலேயே திருவாய்ப்பாடியிலிருக்கிற
நந்தகோபனதுதிருமாளிகையில் இரகசியமாகக் கொண்டுசேர்த்துவிட்டு,  அங்கு
அவன்மனைவியான யசோதைக்கு மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு
பெண்குழந்தையையெடுத்துக்கொண்டு வந்துவிட, அதுமுதல்
கம்சனைக்கொல்லுகிறவரையில் கண்ணபிரான் அக்கோகுலத்திலேயே
இடையர்களுடன் திருவிளையாடல்கள் புரிந்து வளர்ந்தருளினன். கம்ஸன் -
தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல்லப்
பிறந்ததேவகீ புத்திரன் யசோதையினிடம் ஒளித்துவளர்தல் முதலிய
விருந்தாந்தங்களைநாரதர் சொல்லக் கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு
கிருஷ்ணனைக்கொல்லநிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம்வைத்து
வடமதுரைக்கு வரவழைத்துப்பலவகையில்  வதைக்க வழிதேடுகையில்,
கம்சசபையில்கிருஷ்ணபகவான் வேகமாகஎழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மேலேறி
அவனதுகிரீடம் கழன்றுகீழேவிழும்படிஅவனைத் தலைமயிரைப் பிடித்துத் தரையில்
தள்ளி அவன்மேல் தான் விழுந்துஅவனைக் கொன்று ஒழித்தன னென்பது,
மூன்றாமடியிற் குறித்த கதை.

     ஈற்றடியிற் குறித்த கதை;-  கண்ணன் நரகாசுரனையழித்தபின்பு அவனால்
முன்புகவர்ந்துபோகப்பட்ட (இந்திரன் தாயான) அதிதிதேவியின் குண்டலங்களை
அவளுக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன்தோளின்மேலேறித்
தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச்
சகலஉபசாரங்களைச்செய்தும் தேவர்க்கேயுரிய பாரிஜாதபுஷ்பம் மானுடப்
பெண்ணாகியஇவளுக்குத் தகாதென்று சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள்
அதனைக் கண்டுவிருப்புற்றவளாய்ச் சுவாமியைப் பார்த்து 'பிராணநாயகனே!
இந்தப் பாரிசாததருவைத்துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்' என்ன,
கண்ணன் உடனேஅந்தவிருட்சத்தை வேரோடு பெயர்த்துக் கருடன் தோளின்மேல்
வைத்தருளி, அப்பொழுது இந்திராணி தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப்
போர்செய்த இந்திரனைச்சகலதேவசைனியங்களுடன் சங்கநாதத்தினாலே
பங்கப்படுத்தி, பின்புபாரிசாதமரத்தைத் துவாரகைக்குக்கொண்டுவந்து
சத்தியபாமைவீட்டுப் புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளின னென்பதாம்.

     இச்செய்யுளின் ஈற்றடியில் அந்தப்புரம் என்பது வெவ்வேறு பொருளில்
வந்தது,மடக்கு என்னுஞ் சொல்லணி.                              (516)

42.-இது, சாத்தகியையும் சிசுபாலனையும் குறித்தது.

தண்ணத்துளவோன்றனக்கிளவ லிவன்காண்மின்னேசாத்தகியென்று
எண்ணும்போசகுலத்தலைவ னெவருஞ்சூழவிருக்கின்றான்.