இறந்தவர், உடனே தேவர்களாகி வீரசுவர்க்கம் புகுகின்றனரென்பது நூல்துணிபாதலால், பகைவர்களைத் தவறாதுகொல்கிற என்ற பொருளில் 'இமையோர்க்கும்' என்றார்; இது, பிறிதினவிற்சியணி. பாலபாதத்தில் தமிழ்மன்னரைக் கூறவில்லை. (520) 46.-இதுபல அரசர்களைப் பொதுப்படக் குறித்தது. வில்லாண்மையினால் வெங்கருப்பு வில்லோன்றனக்கேநிகரென்னப் பல்லார்புகழும்பான்மையினாற் பதினெண்புவிக்கும்பதியாய எல்லாவரசுநின்பொருட்டா லீண்டேதிரண்டவின்னமுதச் சொல்லாய்நல்லாய்மென்பூவாய் தோகாய்பாவாய்திரௌபதியே. |
(இ - ள்.) இன் அமுதம் சொல்லாய்-இனிய அமிருதம்போன்ற சொற்களையுடையவளே!நல்லாய்-அழகையும் நற்குணநற்செய்கைகளையு முடையவளே! மெல் பூவாய்-(இன்குரலாற் பேசுதலில்) மெல்லிய நாகணவாய்ப்புள் போன்றவளே! தோகாய் -(சாயலில்) மயில்போன்றவளே! பாவாய் - (அழகில்) சித்திரப் பதுமையையும்(அருமையில்)கண்மணிப்பாவையையும் (மோகிப்பித்தலில்) கொல்லிப்பாவையையும்போன்றவளே1 திரௌபதியே-! வில்ஆண்மையினால் - விற்கொண்டு போர்செய்யுயுந்திறத்தினால், வெம் கருப்பு வில்லோன் தனக்கே நிகர் - கொடிய கரும்புவில்லையுடைய மன்மதனுக்கே ஒப்பு, என்ன-என்று, பல்லார் புகழும் பான்மையினால்- பலரும் புகழுந் தன்மையோடு, பதினெண் புவிக்கும் பதி ஆய எல்லா அரசுஉம் -பதினெட்டுத்தேசங்களுக்கும் தலைவர்களாகிய எல்லாவரசர்களும், நின்பொருட்டால்-ஈண்டேதிரண்ட-இங்கே வந்து கூடியுள்ளார்; (எ-று.) எளியகரும்பை வில்லாக்கொண்டு அதில்மெல்லியமலரம்புகளைத் தொடுத்துஎய்து காமப்போரை நடத்திப் பிரமன்முதல் எறும்புஈறாக எல்லாவுயிர்களையும் தன்வசப்படுத்துதலால், மன்மதன், சிறந்தவில்வீர னெனப்படுவன்.கருப்புவில்லோன் றனக்கே, ஏ - உயர்வுசிறப்போடு பிரிநிலை. பதினெட்டுத்தேசங்கள்திரவிடம், சிங்களம் சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம்,கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம்,கங்கம் மகதம், கடாரம், கௌடம், குசலம் என்பன; பிறவாறும் உரைத்தல் உண்டு. புவி - வடசொல்; இதுஅந்தப்பாஷையில் ஏழாம்வேற்றுமைவிரியாயினும் தமிழில்பெயர்மாத்திரமாய் நிற்கும், 47.- 'இவர்களுள் இலக்குஎய்பவன் உனக்கு உரியான்' எனல். இவரிற் றனது தோள்வலியா லரியே றென்ன வெழுந்திருத்தத் தவரிற் புரிநா ணுறவேற்றித் தழல்கான் முனைவெஞ் சாயகத்தால் பவரிற் செறிய நிரைத்துருளும் பல்வாய்த் திகிரிப் பயிலிலக்கைக் கவரிற் செழுந்தார் புனைந்தவனைக் கைக்கொநீண் டிடு கடிதென்றார். |
(இ-ள்.) இவரில் - இந்த அரசர்களுள், (எவனாயினும்), அழ ஏறு என்ன எழுந்திருந்து - ஆண்டுசிங்கம்போல எழுந்து, தனது தோள் வலியால்- தன்னுடைய புஜபலத்தால், அ தவரில் - அந்த வில்லில், புரி நாண் உற ஏற்றி-நாணிக்கயிற்றைப் பொருந்தப் பூட்டி, தழல் கால் முனை வெம் சாயகத்தால் - நெருப்பைச் சொரி |