2.- இதுவுமது. முருகார்ம லர்த்தாம முடியோனை யடியார்மு யற்சித்திறந் திருகாமல் விளைவிக்கு மதயானை வதனச்செ ழுங்குன்றினைப் புருகூதன் முதலாய முப்பத்து முக்கோடி புத்தேளிரும் ஒருகோடி பூதேவ ருங்கைதொ ழுங்கோவை யுறவுன்னுவாம். |
(இ - ள்.) முருகு ஆர் - வாசனைபொருந்திய, மலர் - (கொன்றைப்) பூக்கள்தொடுக்கப்பட்ட, தாமம் - கொன்றைமாலையை, முடியோனை - சிரசிற்கொண்டுள்ளவனும், அடியார் முயற்சி திறம் - பக்தர்களின் முயற்சியின்கூறுபாடு,திருகாமல் - மாறுபட்டிடாமல், விளைவிக்கும் - பயனைவிளையச் செய்கின்றவனாகி,மதம் யானை வதனம் செழுங் குன்றினை - மதயானையின் முகம்போன்ற முகத்தைப்பெற்று வளமுள்ள மலைபோல் ஓங்கி நிற்பவனும், புருகூதன் முதல் ஆய முப்பத்துமுக்கோடி புத்தேளிர்உம் - இந்திரனைத்தலைவனாகவுடையராய் முப்பதுமுக்கோடியரென்று சொல்லப்படுகின்ற தேவர்களாலும், ஒருகோடி பூதேவர்உம்-ஒரு கோடிக்கணக்கான அந்தணராலும், கைதொழும் -வணங்கப்படுகின்றவனுமான, கோவை - தலைவனாகிய விநாயகக்கடவுளை, உற -மிகவும், உன்னுவாம் - தியானிப்போம்; (எ-று.) அடியார்முயற்சித்திறந் திருகாமல் விளைவிக்கும் குன்று எனவே, அடியவனாகியஎனது முயற்சியை [மகாபாரதத்தைத் தமிழாற் பாடுதலை]யும் இடையூறின்றிமுற்றுவிப்பான் அக்கடவுள் என்ற கருத்துக் குறிப்பிக்கப்படும். விநாயகக் கடவுள்வணக்கமாகவேயுள்ள இந்த இரண்டாவது செய்யுள், சில பிரதிகளிலில்லை: ஒருகால்கவியினாற் பாடப்படாது இடைச்செருகலாய் வந்ததாயிருக்கலாம். முப்பது முக்கோடியர்- அஷ்டவசுக்கள், ஏகாதசருத்திரர், துவாதசாதித்தர், அசுவினிதேவரிருவர் என்றமுப்பத்துமூவர்தேவர்களைத் தலைமையாகக் கொண்டவர்கள்: இவர்கட்கெல்லாந்தலைவன் தேவேந்திரன் என்க. வானுலகத்துத்தேவர் போலப் பூமியில்விளங்குபவரென்ற காரணத்தால் பிராமணர், பூதேவரெனப்பட்டார். கோடி - மிகப்பலரென்ற பொருட்டது. புருஹூதன் - யாகத்தில் மிகுதியாக அழைக்கபடுபவனெனஅவயவப் பொருள்படும். (2) வேறு. 3.- முதற்கடவுளின் வாழ்த்து. ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம் காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம் வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப் பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி. |
(இ - ள்.) எவன்-, ஆக்கும் ஆறு - படைக்கும்படி, அயன் ஆம் - பிரமனாவனோ: முதல் ஆக்கிய உலகம் - முதலிற் படைக்கப்பட்ட அவ்வுலகத்துப் பிராணிகளை; காக்கும் ஆறு - பாதுகாக்கும்படி, செங்கண் நிறை கருணை - (செந்தாமரை மலர்போன்று) செந்நிறமான கண்களிலே நிறைந்த கருணையாகிய, அம் -நீரைக்கொண்ட, |