பக்கம் எண் :

308பாரதம்ஆதி பருவம்

     உரைசால்பெருமை-கற்பினாலாகிய புகழ்ச்சி; "தகைசான்ற சொற்காத்துச்
சோர்விலாள் பெண்" என்றது காண்க.

     இதுமுதல் இருபத்தைந்து கவிகள்-பெரும்பாலும்மூன்றாஞ்சீர் மாங்கனிச்சீரும்,
மற்றையவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.

74.காதிற்கலந்தகடைக்கண்ணிதன் கற்புமன்பும்
சோதித்தலுன்னித்தணியாத துவக்குநோயன்
கோதித்தநெஞ்சன்பெருமூப்பினன் கூர்ந்துநாளும்
வாதித்தலன்றிமகிழாமனை வாழ்வுபூண்டான்.

     (இ-ள்.) (அவன்),  காதில் கலந்த கடைக்கண்ணிதன் - காதையளாவிய
கண்ணின்கடையையுடைய அம்மனைவியினது, கற்புஉம்-பதிவிரதாதருமத்தையும்.
அன்புஉம்-(தன்னிடம்அவளுக்கு உள்ள) அன்பையும், சோதித்தல் உன்னி-(தான்)
பரிசோதித்தறியநினைத்து, தணியாத துவக்கு நோயன்-குறையாத (மிக்க)
குட்டநோயைக்கொண்டவனும், கோதித்த நெஞ்சன்-(எப்பொழுதும்)
கோபத்தையேகொண்டமனத்தையுடையவனும், பெருமூப்பினன் - முதிர்ந்த
முதுமையையுடையவனுமாய்,-நாள்உம் - தினந்தோறும், கூர்ந்து வாதித்தல் அன்றி-
மிகுதியாக (மனையாளை)வருத்தப்படுத்துதலேயல்லாமல், மகிழா-
(ஒருபொழுதாயினும்) மகிழ்ச்சிக்குஇடமில்லாத,மனை வாழ்வு-இல்லறவாழ்க்கையை,
பூண்டான்-மேற்கொண்டான்;

     அந்த மௌற்கலியன், அவளதுகற்பின் உறுதியையும், அன்பின்நிலையையும்
சோதிக்கக்கருதி, மிகுந்த குஷ்டநோயும், அதனாற் சிதைந்த வடிவமும், மிக்க
கிழத்தனமும், எப்பொழுதும், பெருங்கோபமும், உடம்பில் துர்க்கந்தமு
முடையவனாகக் தன்னைக்  காட்டியதோடு மனையாளை மிகவும்
வருத்துதலுஞ்செய்தனன் என்பதாம். துவக்குநோய்- உடல்நோய்: த்வக் - வடசொல்;
தோல்: உடம்புக்கு இலக்கணை. கோதித்த-க்ரோதம் என்ற வடசொல்லின் திரிபான
கோதம்என்பதனடியாப்பிறந்த பெயரெச்சம். "குழைப்புறங்கடந்த செங்கண்"
என்றார்போல, 'காதிற்கலந்த கடைக்கண்ணி' என்றார்; "கண் செவியுறப்போந்
தகன்றனவே" என்றார் சிந்தாமணியாகும்.                          (549)

75.கச்சிற்கடங்காமுலையாளக் கணவனுண்ட
மிச்சிற்புறத்துவிரல்வீழவும் வீழ்தன்மிஞ்சிக்
குச்சித்தலின்றிநுகர்ந்தாள் கொடுங்காமநோய்கொண்டு
இச்சித்தவின்பநுகராம லிளைத்தமெய்யாள்.

    (இ-ள்.) கொடுங் காமம் நோய் கொண்டு இச்சித்தஇன்பம் நுகராமல் இளைத்த
மெய்யாள்-கொடிய காமநோயைப் பொருந்தி விரும்பிய சிற்றின்பத்தை
அனுபவியாமல்மெலிந்தஉடம்பையுடையவளான, கச்சிற்கு அடங்காமுலையாள்-
கச்சுக்குஅடங்காத(பருத்த) தனங்களையுடைய அந்த நாளாயணி, அ கணவன்
உண்ட மிச்சில் புறத்துவிரல் வீழஉம்-அந்தக்கணவன் உண்ட அந்நசேஷத்தில்
(அவன்) கைவிரல்அழுகிவிழுந்துகிடக்கவும், குச்சித்தல் இன்றி-
அருவருப்புக்கொள்ளுதலில்லாமல்,வீழ்தல் மிஞ்சி நுகர்ந்தாள்- விருப்பம்மிக்கு
(அந்தச்சேடித்த அன்னத்தை) உண்டாள்;( எ- று.)