னுடைய கட்டளையின்கீழ் அடங்கிநிற்பேன்,' என - என்று சொல்லி, மருட்டினான் -(தன்திறத்தில்) மனம் மயங்கச் செய்தான்; (எ -று.) சந்தனுவின் பணிமொழியால் கங்கையாள் அந்த அரசனிடத்து விருப்பங்கொண்டன ளென்றவாறு. என்ப - பலவின்பாற்பெயர். என்பயாவையும் நினது- ஒருமைப்பன்மைமயக்கம். தநதன்= செல்வத்தைத் (தன்னிடத்துத்) தாங்குபவன். (53) 46.- சந்தனுவும் கங்கையும் அக்கினிசாட்சியாக மணம் புரிந்து மகிழ்தல். அருமறைமுறையினா லங்கிசான்றெனத் திருமணம்புரிந்துளந் திகழவைகினான் இரதியுமதனனு மல்லதில்லைமற்று ஒருவருமுவமையென் றுலகுகூறவே. |
(இ - ள்.) அரு மறை முறையினால் - (அறிதற்கு) அரியவேதத்திற் கூறிய முறைப்படி,அங்கி சான்று என - அக்கினிதேவன் சாட்சியாக அமைய, திருமணம் புரிந்து-விவாகஞ்செய்து கொண்டு, இரதி உம் மதனன்உம்-இரதிதேவியும் மன்மதனும், அல்லது- அல்லாமல், மற்று ஒருவர்உம் உவமை இல்லை வேறு ஒருவரும் உவமையில்லை,என்று-, உலகு- உலகத்தவர், கூற-,- உளம் திகழ - மனம்மகிழ, வைகினான் - (சந்தனு)இருந்தான்; (எ -று.) 47.-கங்கையாள் கருக்கொண்டு பெற்றமைந்தனைக் கங்கை நீரிலெறிதல். மருவுறச்சிலபகன் மணந்துமான்விழி கருவுயிர்த்தனளெனக் களிகொள்காலையிற் பருவமுற்றன்புடன் பயந்தமைந்தனைப் பொருபுனற்புதைத்தனள் புவனங்காணவே. |
(இ-ள்.) சில பகல் - சிலநாள்கள்,- மருவு உற மணந்து - பொருந்தக்கூடியிருந்து, 'மான் விழி - மான்போன்ற கண்பார்வையையுடைய கங்கையென்பாள், கருஉயிர்த்தனள் - (கருப்பம் கொண்டிருந்து) ஈன்றாள்,' என - என்று, (சந்தனுமகாராசன்), களிகொள் காலையில் - மனம் மகிழும்போது,- (அம்மகிழ்ச்சிகெட),- பருவம் உற்றுஅன்புடன் பயந்த மைந்தனை - கரு முதிரும்பருவத்தையடைந்து[பத்துமாதம்வயிற்றிற்கொண்டிருந்தபின்] அன்போடு பெற்ற குமாரனை, புவனம் காண -உலகத்தவர் பார்த்துக்கொண்டிருக்கையில் தானே, பொரு புனல் - அலைமோதுகின்றநதியின் நீரில், புதைத்தனள் - வீசி யெறிந்தாள், (அந்தக்கங்கையாள்); (எ -று.) புனலில் புதைத்தல் - நீரில் மறைந்திடும்படி வீசி யெறிந்திடுதல். மான்விழி- உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. (55) 48.- வருந்தினானாயினும், சந்தனு பெருங்காதலால் ஒன்றும் பேசாது, முன்னிலும் அவளிடம் அன்புகொண்டிருத்தல். கண்டுளம்வெருவிமுன் கதித்தவாசகங் கொண்டுரையெடுத்திலன் கொண்டகாதலான் ஒண்டொடியுடன்மணந் துருகிவைகினன் பண்டையினெழுமடி பரிவுகூரவே. |
|