பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்329

3.- இதுமுதல் நான்குகவிகள்-தருமபுத்திரனது
பட்டாபிஷேகம் கூறும்.

செழுமுரசுயர்த்தவேந்தனுக்கின்று திருவபிடேகநாளென்று
முழுமுரசறைந்துநகரிகோடித்து முடிபுனைகடிகொண்மண்டபத்தின்
எழுமுரசதிரப்பகீரதிமுதலா மெத்துறைப்புனல்களுமியற்றித்  
தொழுமுரசுடன்வெள்வலம்புரிமுழங்கச் சுருதிமாமுனிவருந்தொக்[கார்.

     (இ-ள்.) (திருதராட்டிரன்), 'செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு-
மாட்சிமையுடையமுரசவாத்தியத்தின் வடிவத்தையெழுதிய கொடியை உயரநாட்டிய
தருமாராசனுக்கு, இன்று - இத்தினம், திரு அபிடேகம் நாள்-சிறந்த
பட்டாபிஷேகம்செய்வதற்குஉரியநாள்,' என்று-என்றுசொல்லி, முழுமுரசு அறைந்து-
பெரிய முரச வாத்தியங்களைஅடிப்பித்து எங்குந்தெரிவித்து, நகரி கோடித்து-
அந்நகரத்தை அலங்கரிப்பித்து, முடிபுனை கடி கொள் மண்டபத்தின்-
முடிசூட்டுதற்கு உரியவிளக்கத்தைக்கொண்ட(பட்டாபிஷேக) மண்டபத்திலே,
எழு முரசு அதிர பகீரதி முதல் ஆம் எ துறைபுனல்கள் உம் இயற்றி-ஒலியெழுகிற
முரசவாத்தியங்கள் முழங்கக் கங்கை முதலியஎல்லாப்புண்ணிய தீர்த்தங்களினின்று
நீர் கொணர்வித்து, தொழு முரசுடன் வெள்வலம்புரி முழுங்க-(யாவராலுங்)
கொண்டாடப்படுகிற முரசவாத்தியங்களுடனேவெண்மையான வலம்புரிச்
சங்குகளையும் முழங்குவிக்க, சுருதி மா முனிவர்உம்தொக்கார் -
வேதங்களையறிந்தபெரிய இருடிகளும்வந்து கூடினார்கள்;

     முதலடியில், முரசு - ஆகுபெயர். முழு முரசு -  முரசுக்குஉரிய
இலக்கணத்திற்குறையாத முரசு. அறைந்து, கோடித்து, முழுங்க- பிறவினைப்
பொருளில் வந்ததன்வினை. மங்கலவாத்தியம் வாசிப்போர் அதனைத்தொழுது
தொடங்கும் மரபுபற்றி, 'தொழுமுரசு' என்றதாகவும் கொள்ளலாம்; அன்றியும்,
வாத்தியம் வாசித்தல் என்றபொருளில் 'வாத்தியம் சேவித்தல்' எனப் பரிபாஷையாக
வழங்குதற்கு ஏற்ப, 'தொழுமுரசு' என்றதாகவுங் கொள்ளலாம்.

4.அத்தியின்பலகைநவமணியழுத்தி யாடகத்தமைத்தரிமுகத்தால்,
பத்திகொள்பீடத்தழகுறவிருத்திப் பசும்பொனின்றசும்புகணிறைந்த,
சுத்தநீர்வியாதன்றௌமியன்முதலோர் சொரிந்தனர்சோமன்
                                         வந்துதித்துச்,
சித்திரகிரியினெடுநிலாவெள்ளஞ் சீருடன்வழியவார்த்தெனவே.

     (இ-ள்,) வியாதன் தௌமியன் முதலோர் - வியாசனும் தௌமியனும்
முதலானமுனிவர்கள்,-அத்தியின் பலகை- அத்திமரத்தின் பலகையின்மேல்,
ஆடகத்துஅமைத்து-பொன்னினால் தொழில்செய்து, நவ மணி அழுத்தி-
நவரத்தினங்களைப்பதித்து, அரி முகத்தால் பத்தி கொள் பீடத்து-சிங்கத்தின்
முகம்தோன்ற ஒழுங்காகச்சித்திரிக்கப்பட்ட சிங்காதனத்திலே. அழகு உற இருத்தி-
(தருமபுத்திரனை)அழகாகவீற்றிருக்கச்செய்து, (அவனது முடியின்மேல்), பசும்
பொனின் தசும்புகள்நிறைந்த சுத்தம் நீர் - பசும்பொன்னாலாகிய குடங்களில்
நிறைந்துள்ள பரிசுத்தமானபுண்ணியதீர்த்தங்களை,-சோமன் வந்து உதித்து
சித்திரகிரியில் நெடு நிலாவெள்ளம்சீருடன் வழியவார்த்து என - சந்திரன்வந்து