என்பர் ஒருசாரர்; மற்றொருசாரார் 'அவ்வொருகுதிரைக்கு ஏழுபெயர்க ளுள்ளன' என்பர்; அவ்விருவகையும் 'எழுபெயர்ப்புரவி' என்ற தொடரில் அமையும். இந்திரப்பிரத்தத்தின் சிறப்பை விசுவகர்மா தருமனுக்குக் காட்டுவதாகவே 10 - ஸ்லோகங்கள் இங்குப்பாலபாரதத்து உள்ளன: ஆங்குள்ள வருணனைகளும் இதிலுள்ள வருணனைகளும் ஒப்புமைப்பட்டவை சிலவேயாகும். விரவிவந்தெறித்து எனவும் பாடம். (614) 31. | அருளுடையறத்தின்வாழ்வா மந்நகரில்லமெங்கும் இருளுடையிந்த்ரநீலத் தியன்றசாளரங்கணோக்கி உருளுடையொற்றைநேமி யுறுபரித்தேரோன்சீறத் தெருளுடைத்திமிரம்போன சின்னெறிபோலுமென்பார். |
(இ-ள்.) அருள் உடை அறத்தின் வாழ்வு ஆம் - கருணையையுடையதான தருமத்தின் வாழ்க்கை யமைந்த, அ நகர் - அந்த நகரத்திலுள்ள, இல்லம் எங்குஉம்-மாளிகைகளிற் பலவிடத்துமுள்ள, இருள் உடை இந்த்ர நீலத்து இயன்ற சாளரங்கள்-மிக்ககருநிறமுடைய இந்திரநீலரத்தினங்களாலமைந்த பலகணிகளை, நோக்கி-பார்த்து,- 'உருள் உடைஒற்றை நேமி உறுபரி தேரோன் சீற- உருளுதலையுடைய ஒற்றைச்சக்கரமமைந்த குதிரை பூண்ட தேரையுடையவனான சூரியன் உக்கிரங்கொண்டுஅழித்தலால், தெருள் உடை திமிரம் போன - தடுமாற்றத்தையுடைய இருள் நுழைந்துஓடிச்சென்ற, சில் நெறி போலும் சிறுவழிகள் போலும்,' என்பார்-; (எ- று.) இந்திரநீலரத்தினத்தினாலாகியதனால் நீலநிறமுடையனவாயிருக்கிற சாளரங்களை,இரவிக்கு அஞ்சி இருள் இரிந்து சென்ற சிறுவழிக ளென்று குறித்தார்; தற்குறிப்பேற்றவணி. 'சின்னெறி' என்பதில், சின்மை-சிறுமை. (615) 32. | சமர்முகப்பொறிகண்மிக்க தடமதிற்குடுமிதோறும் குமருறப்பிணித்தபைம்பொற் கொடித்துகிலசைவுநோக்கி நமர்புரக்கிழத்தியும்பர் நாயகன்புரத்தினோடும் அமர்பொரப்பற்பல்கையா லழைப்பதுபோலுமென்பார். |
(இ-ள்.) சமர் முகம் பொறிகள்-போர்செய்தற்குஉரிய தோற்றத்தையுடைய யந்திரங்கள், மிக்க-நிறைந்துள்ள, தட மதில் - பெரிய அந்நகரத்து மதிலின், குடுமிதோறும்உம்-சிகரங்களி லெங்கும், குமர் உற பிணித்த - அழிவின்மைபொருந்த (உறுதியாக)க் கட்டப்பட்டுள்ள, பைம் பொன் கொடி துகில்-பசும்பொற்காம்பையுடைய கொடிச்சீலைகளின், அசைவு-காற்றிலசையுந் தன்மையை, நோக்கி-பார்த்து,-நமர் புரம் கிழத்தி- 'நம்முடைய இந்நகரத்துக்கு உரிய தேவதை, உம்பர் நாயகன் புரத்தினோடுஉம்அமர் பொர-தேவராசனான இந்திரனது அமராவதிநகரத்தோடு போர்செய்ய(க்கருதி);பற் பல் கையால் அழைப்பது போலும்-(தனது) மிகப்பலவாகிய கைகளினால்(அந்நகரத்தை) அழைப்பதையொக்கும்,' என்பார்-என்றுசொல்லுவார்கள்; (எ-று.) |