(இ-ள்,) கண்உறு பொருள்கள்யாஉம் - எதிர்ப்படுகிறபொருள்களையெல்லாம், கண்டு கண்டு - பார்த்துப்பார்த்து, உவகை கூர-மகிழ்ச்சிமிக, எண்உறுகிளைஞரோடுஉம் - பெருமைபொருந்திய (தன்) சுற்றத்தாருடனும், யாதவ குமரரோடுஉம் - (கண்ணபிரானுடன் வந்த) யதுகுலகுமாரர்களுடனும், பண் உறு வேதம் வாழ்நர் பலரொடுஉம் - ஸ்வரமமைந்த வேதங்களுக்கு உரியராய் வாழ்கின்றபல அந்தணர்களுடனும், ஆங்கண் வைகி - அந்நகரினிடத்திற்சேர்ந்து தங்கி,(பின்பு), விண் உறு தபதிக்கு விடை கொடுத்தருளினான் - தேவலோகத்திற் பொருந்திய சிற்பியான விசுவகருமனுக்கு அருளோடு அனுமதிதந்து அவனை அனுப்பினான்; (எ-று.)-இங்குச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தருமனென்ற எழுவாய் வருவிக்க. அம்ம - உரையசை. (622) 39.-கண்ணன்முதலியோர் செல்லுதலும், தருமனது அரசாட்சியும். கேசவன்முதலாவுள்ள கிளைஞருங்கேண்மைதப்பா வாசவன்முதலினோரு மன்னுதம்பதிகள்புக்கார் ஓசவன்றிகிரியோச்சி யுதயபானுவுக்குமேலாந் தேசவன்றானும்வையந் திசைமுறைதிருத்தியாண்டான். |
(இ-ள்.) கேசவன் முதல் ஆ (க) உள்ள - திருமாலின் திருவவதாரமான கண்ணபிரான் முதலாகவுள்ள, கிளைஞர்உம் - சுற்றத்தார்களும், கேண்மை தப்பா வாசவன் முதலினோர்உம் - உறவுமுறைமைக்குஉரிய உதவியில் தவறுதலில்லாத இந்திரன் முதலானவர்களும், மன்னு தம் பதிகள் புக்கார் - நிலைபெற்ற தம் தமது நகரங்களுக்குச் சென்றார்கள்; உதயபானுவுக்குஉம் மேல் ஆம் தேசவன்தான்உம்- உதித்துவிளங்குகிற சூரியனினும் மேலான ஒளியையுடையவனாகிய தருமனும். ஓசம்வல்திகிரி ஓச்சி - ஒளியையும் வல்லமையையுமுடைய (தனது) ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்தி, வையம்-பூமியை, திசை முறை திருததி ஆண்டான் -எங்கும் நீதி முறைமை ஒழுங்காக நடக்கச்செய்து அரசாண்டான்; ( எ- று.) தன்மகனான அருச்சுனனுக்கும், அவனது உடன்பிறந்தவர்களான தருமன் முதலியோர்க்கும் உதவுமாறு. இந்திரன் நகரமமைப்பித்தமைபற்றி, 'கேண்மைதப்பா வாசவன்' என்றார். கேஸவ னென்ற வடமொழி - பிரமனையும் சிவனையும் தன் அங்கத்திற்கொண்டவ னென்றும் (க-பிரமன், ஈசன்-சிவன்) மயிரழகையுடையவ னென்றும் (கேசம்-மயிர்), கேசியென்னும் அசுரனைக்கொன்றவனென்றும் [கேசி- கண்ணனைக்கொல்லும்படிகம்சனால்ஏவப்பட்டுக் குதிரைவடிவத்தோடுவந்த ஓர் அசுரன்) பொருள்படும். ஓசம், தேசு=ஓஜஸ், தேஜஸ் என்ற வடசொற்களின் விகாரம்.கேசவன் பதி-துவாரகை. வாசவன்பதி-அமராவதி. (623) 40.- ஒருநாள் நாரதமாமுனிவன் அங்குஎழுந்தருளல். யாய்மொழிதலைமேற்கொண்டு மிளையவர்மொழிகள்கேட்டும் வேய்மொழிவெய்த்தோள்வல்லி மென்மொழிவிரும்பலுற்றும் வாய்மொழியறத்தின்மைந்தன் மாநகர்வாழுநாளில் ஆய்மொழிப்பாடல்யாழோ ரந்தணனாங்கண்வந்தான். |
|