'இறையோடுயரிருகையுமெடுத்து' என்பதற்கு-தலைமேற் கை தூக்கிக்கொண்டு என்றும் உரைக்கலாம்; இறை-தலை. இறையோடுயர் என்பதற்கு- கைரேகையாற்சிறந்த என்றாருமுளர். முறையோ முறையோ, அடுக்கு- அவலம்பற்றியது. வேதவிதிப்படிஒழுகுபவன்- வைதிகன். (633) 3.-அருச்சுனன் வந்து வினாவ, அந்தணன் செய்திகூறுல். கடைகாவலர்குறைகூறலும் விசயன்கடிதிற்றன் புடைகாவலர்தொழவந்து புவித்தேவனைமறையின் தொடைகாவலவிதுவென்னென வவனுந்தொடுகழலோய் விடைகாவலர்நிரைகொண்டனர் வில்வேடுவரென்றான். |
(இ-ள்.) கடைகாவலர் - அரண்மனை வாயில்காவலாளர்கள், குறை கூறலும்- (அந்த அந்தணனது) முறைப்பாட்டை (அரண்மனையினுட்சென்று) சொன்னவுடனே, விசயன்-அருச்சுனன், கடிதின்- விரைவாக, தன் புடை காவலர் தொழ வந்து - தனதுபக்கங்களில் அரசர்கள் வணங்க வந்து, புவிதேவனை- பூதேவனாகியபிராமணனை, (நோக்கி), மறையின் தொடை காவல இதுஎன் என- 'வேதங்களின் தொடர்ச்சியைப் பாதுகாத்தலில்வல்லவனே! நீ இங்ஙனம்முறையிடுவது என்னகாரணத்தால்?' என்றுவினாவ, அவன்உம்-அந்த அந்தணனும், விடை - (அவ்வினாவிற்கு) விடையாக, 'தொடு கழலோய்- அணிந்தவீரக்கழலையுடையவனே! வில் வேடுவர் நிரை காவலர் கொண்டனர்-வில்லின் திறத்தையுடைய வேடர்கள் (எனது) பசுக் கூட்டங்களை (அவற்றை)க் காக்கின்ற இடையர்களிடத்தினின்று கொள்ளைகொண்டார்கள்.' என்றான்-என்றுசொன்னான்; (எ-று.) விடைஎன்றான்-என்றுவிடைகூறினா னென்க. என்றான் என்பது-என்று சொன்னானென்றுபொருள்படுதலால், சொல்லெச்சம். எதிர்த்த இடையர்களைப் பொருது வென்றகருவியை யுடைமை தோன்ற, 'வில்வேடுவர்' என்றான். விடைகாவலர்- இடையர்என்றாரு முண்டு. தொடை - ஒழுக்கமெனினுமாம். (634) 4.-அருச்சுனன் அந்தணனுக்கு அபயமளித்துவில்லெடுக்கச் சென்றவிடத்துத் தருமனுடனே திரௌபதியைக் காணுதல். அஞ்சாதொழிமுனிநீயுன தானின்கணமின்றே எஞ்சாவகைதருவேனென வேவுக்கொருதிலகன் வெஞ்சாபமெடுப்பான்வரு விசயன்றருமனுடன் மஞ்சார்பொழில்விளையாடிடு மயில்சீறடிகண்டான். |
(இ-ள்.) 'முனி -முனிவனே! நீ-, அஞ்சாதுஒழி - அஞ்ச வேண்டா; உனது ஆனின் கணம் - உன்னுடைய பசுக்கூட்டத்தை, இன்றுஏ- இப்பொழுதே, எஞ்சா வகைதருவேன்-(ஒன்றுங்) குறையாதபடி(யான்மீட்டுக் கொணர்ந்து) கொடுப்பேன்,' என- என்று (அந்தணனுக்கு அபயமளித்து) உறுதிமொழிகூறி, வெம் சாபம் எடுப்பான்வரு - கொடிய (தனது) வில்லையெடுத்தற்கு (ஆயுதசாலையில்) வந்த, ஏவுக்கு ஒருதிலகன் விசயன் - பாணப் பிரயோகவித்தைக்கு ஒரு திலகம்போல அழகுசெய்பவனான அருச்சுனன், தரும |