பக்கம் எண் :

36பாரதம்ஆதி பருவம்

மனவுறுதியைத் தெரியப்படுத்த, 'வெறுத்தெனை முனியினும் இதுவேண்டும்'
என்கின்றானென்க. ஆல் - அசை.                            (61)

54.- கங்காதேவி அரசன்செயலைக் கண்டித்துக் கூறுதல்.

என்றுபற்பலமொழி யிவனியம்பவே
நன்றுநன்றவனிப நவின்றவாசகம்
இன்றுநின்றிரங்கினை யெழுவர்மைந்தரைக்
கொன்றவன்றென்செய்தாய் கொடியையென்னவே.

     (இ - ள்.) என்று-, பல் பல மொழி - பலபடியான வார்த்தைகளை, இவன் -
இந்தச்சந்தனுராசன், இயம்ப - சொல்ல,- (அது கேட்ட கங்காதேவி மன்னவனை
நோக்கி),-'அவனிப - மன்னவனே! நவின்ற - (நீ) கூறிய, வாசகம் - சொல், நன்று
நன்று - மிகநன்றாயிருந்தது: இன்று-, நின்று - மனத்திலுறுதிகொண்டிருந்து,
இரங்கினை- (பிள்ளை யிறப்பதற்கு) இரக்கமுற்றாய்: எழுவர் மைந்தரை கொன்ற
அன்று-ஏழுபுத்திரர்களை (நதிப்புனலிலே வீசியெறிந்து) கொன்ற அவ்வப்போது,
என் செய்தாய்- என்னசெய்தாய்? கொடியை - கொடுமையையுடையாய்,' என்ன -
என்றுபழித்துக்கூற,- (எ-று.) "அரசனுமுணர்ந்து" என மேற்கவியோடு குளகமாகத்
தொடரும்.

     எழுவர்மைந்தரைக் கொன்றஅன்று என்செய்தாய் என்றது - இப்போது
எட்டாவது குழந்தைக்காகக்கொண்ட இரக்கம் அப்போது எல்லாம்
எங்கே போய்விட்டது? என்றவாறு. அரசன் கங்கையைப் பழித்தாற்போலக்
கூற,அன்னாள் மறித்துப்பழித்தாளென்க. நன்று நன்று - இகழ்ச்சிக்குறிப்பு: அடுக்கு,
வெகுளிபற்றியது.                                               (62)

   55.- அப்போது அரசன்மனத்து உணர்ச்சிதோன்றி அந்தத் தேவியை
'நீ யார்? பெற்ற புதல்வரைக் கொன்ற காரணம் என்?' என்றுவினவ,
கங்கையாள் கூறத்தொடங்குதல்.

அரசனுமுணர்ந்து நீ யார்கொல்பாலரைத்
திரைசெறிபுனலிடைச் செற்றதென்கொலாம்
உரைசெயவேண்டுமென் றுரைப்பவஞ்சியும்
வரிசையினுயர்ந்ததன் வரவுகூறுவாள்.

     (இ-ள்.) அரசன்உம் - சந்தனுவும், உணர்ந்து -உணர்ச்சியடைந்து
[மனத்திடையாராய்ச்சி தோன்றப்பெற்று என்றபடி], 'நீ யார் கொல்-?
பாலரை - (பெற்ற) புதல்வரை, திரை செறி புனலிடை - அலைநெருங்கிய
வெள்ளநீரிலே, செற்றது - உயிர்நீங்குமாறு எறிந்தது, என் கொல் ஆம் -
என்னகாரணம்பற்றியாகும்? உரை செய வேண்டும் - (இவ்விஷயங்களைக்)
கூறவேண்டும்' என்று உரைப்ப - என்று கூற, வஞ்சிஉம்- வஞ்சிக்கொடிபோன்ற
கங்காதேவியும், வரிசையின் உயர்ந்த - பெருமையினால் மேம்பட்ட, தன் -
தன்னுடைய, வரவு - (இவ்வுலகத்து) வந்துபிறந்த சரிதையை, கூறுவாள் -
சொல்பவளானாள்; (எ -று.)

     வரவு - தொழிலாகுபெயரால், வருதலைக்கொண்ட
சரிதையையுணர்த்தும்.                                            (63)