பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்405

     (இ-ள்.) உள் அடங்கிய மனத்திற்குள் அடங்கியிருக்கிற, காமம் வெம் கனல் -
காமமாகிய கொடியநெருப்பு, புறத்துஓடி-  வெளியேசென்று, கொள்ளைகொண்டு -
கவர்ந்துகொண்டு, உடல் மறைத்துஎன - உடலைமறைத்தாற்போல, கூறைஉம் -
காவிவஸ்திரமும், தான்உம் - தானுமாக, மெள்ளவந்து-, தன் கடி மனை மேவிய -
தன்னுடைய சிறப்புள்ள மனையிலேபொருந்திய, கள்ளம்வேடம்வஞ்சனை -
பொய்யாகச் சன்னியாசிவேடம்பூண்டுள்ள வஞ்சகத்தையுடையனான அருச்சுனனை,
கற்புஉடை கன்னி - கற்பினையுடைய கன்னிகையான சுபத்திரை, அறிந்திலள் -
அறித்தாளில்லை; (எ-று.)

     சன்னியாசிவேடம்பூண்டுவந்துள்ளவன் அருச்சுனனே யென்பது
சுபத்திரையாலறியப்படவில்லையென்பதாம். காஷாயவஸ்திரந் தரித்திருப்பதை,
உள்ளேயிருக்கிற காமக்கனல் புறத்திலும்வந்து அருச்சுனனைக்கொள்ளை
கொண்டதோஎன்னுமாறுள்ளது எனத் தன்மைத்தற்குறிப்பேற்றவணிபடக் கூறினார்.
கனலும் காவியாடையும் செந்நிறமாதல், இங்கன் வருணித்தற்கு ஒருகாரணம்.
சுபத்திரையைப் பிறரறியாமல்மணப்பதற்கே இந்தவேடம்பூண்டிருத்தலால்,
'கள்ளவேடவஞ்சன்' என்றது.

     இதுமுதல் இருபத்தொரு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும்விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.    (689)

59.- இரவில் அருச்சுனன்ஓரறையிற் படுக்க, மற்றோரறையிற்
சுபத்திரை தன்பாங்கியருடன் துயிலுதல்.

ஈங்குவந்ததென்றவப்பய னென்றுகொண்டெண்ணி
ஆங்குவந்ததொருமனையிடை யருந்தவன்றுயிலத்
தூங்குகண்ணினள்சுபத்திரை தோழியர்பலரும்
பாங்குவைகமற்றொருமனை புகுந்துகண்படுத்தாள்.

     (இ-ள்.) 'ஈங்கு - இங்கே, வந்தது- (சுபத்திரை) வந்தது, என்தவம் பயன்,-
'என்றுகொண்டு எண்ணி - என்று நினைத்து, அருந்தவன் - அரிய
சன்னியாசிவேடம்பூண்ட அருச்சுனன், ஆங்கு - அங்கே, உவந்து - மகிழ்ந்து,
ஒருமனையிடை - ஓரறையிலே, துயில - நித்திரைசெய்வான்போலிருக்க,-
சுபத்திரை-,தூங்கு கண்ணினள் - நித்திரைக்குறிப்புத்தோன்றியகண்ணினளாக,
(உடனே), மற்றொருமனைபுகுந்து - வேறோரறையிலே சேர்ந்து, தோழியர்
பலரும்-, பாங்கு வைக -அருகே தங்கியிருக்க, கண்படுத்தாள் - துயில்பவளானாள்;
(எ-று.)-என்றுகொண்டுஎன்பதில், 'கொண்டுஎன்பது அசைநிலை.     (690)

60.- இதுமுதல்மூன்றுகவிகள் - அருச்சுனனுடைய காம
தாபத்தைத் தெரிவிக்கும்.

புடவியெங்கணும்புதையவான் பொழிதருபுனலால்
அடவியாரழலவியவு மவிந்திலதையோ
தடவிவாடைமெய்கொளுத்திடத் தனஞ்சயற்கணங்கின்
விடவிலோசனக்கடைதரு விரகவெங்கனலே.