பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்413

செயற்கையழகினால், ஒருவரும் பிறர் ஒப்பு அலர் என்னும் ஆறு உயர்ந்தார் -
பிறரொருவரும் (தங்கட்கு) உவமையாகா ரென்னும்படி சிறப்புற்றார்கள்; (எ-று.) (706)

76.- கண்ணனது சங்கல்பத்தால் வசிஷ்டன் முதலிய
முனிவர்கள் அங்குவந்துசேர்தல்.

பாலருந்ததிநறுநெய்யாய்ப் பாடியிற்கள்ளத்
தாலருந்ததிவிரகன தருளினால்விரைவிற்
சாலருந்ததிதலைவனுந் தலைபெறும்பலநுண்
ணூலருந்ததியுறப்புகுந் தாசிகணுவன்றார்.

     (இ-ள்.) ஆய்ப்பாடியில் - இடைச்சேரியில், பால் - பாலையும் அருந்ததி -
அருமையான தயிரையும், நறு நெய் - நறுமணமுள்ள சிறந்த வெண்ணெயையும்
நெய்யையும், கள்ளத்தால் அருந்து - களவினா லெடுத்து உண்ட, அதிவிரகனது -
மிக்கதந்திரமுடையவனான கண்ணபிரானது, அருளினால்-, சால் அருந்ததி
தலைவன்உம் - (கற்பினால்) நிறைந்த அருந்ததியின் கணவனான வசிஷ்டனும்,
தலைபெறும் பலநுண் நூலர்உம் - தலைமைபெற்ற பல நுட்பமான நூல்களை
யுணர்ந்த முனிவர்களும்,விரைவில் - விரைவாக, ததி உற புகுந்து - கூட்டமாக
வந்து, ஆசிகள் நுவன்றார் -ஆசீர்வாதங்களைச் சொன்னார்கள்; (எ-று.)

     ததி - தயிர்: தற்பவமான வடசொல். ததி - வரிசை: தற்சம வடசொல்.
இச்செய்யுளில் 'திரிபு' என்னும் சொல்லணி காண்க.                   (707)

77.- சுபத்ராகல்யாணம்,

தொடங்கிநாதவெம்முரசுடன் சுரிமுகந்தழங்கச்
சடங்கினாலுயராகுதித் தழலவன் சான்றா
விடங்கினான்மிகுவிசயனக் கன்னியைவேட்டான்
மடங்கினார்தமபதிதொறு மவ்வுழிவந்தார்.

     (இ-ள்.) நாதம் வெம் முரசுடன் - ஓசையையுடைய விரும்பப்படும்
முரசவாத்தியங்களோடு, சுரி முகம் - சங்கவாத்தியங்கள், தழங்க - ஒலிக்க,
சடங்கினால்உயர் ஆகுதி தழலவன் சான்று ஆ - வைதிகச் சடங்கினாற் சிறந்த
ஆகுதியையுடைய அக்கினி தேவன் சாக்ஷியாக, விடங்கினால் மிகு விசயன் அ
கன்னியைதொடங்கி வேட்டான் - அழகினால் மிக்க அருச்சுனன் அச்சுபத்திரையை
முயன்றுமணஞ்செய்தான்; (பின்பு), அ உழி வந்தார் தம பதிதொறும் மடங்கினார் -
அவ்விடத்தில் வந்த இந்திரன் முதலியோர் தம்தம் இருப்பிடங்கட்கு மீண்டு
சென்றார்கள்; (எ-று.)

     மணமுரசு என்றதற்கு, 'வெம்முரசு' என்றார்; 'வெம்மை வேண்டல்'. சுரிமுகம் -
சுழிந்தமுகமுடைய தெனப் பொருள்படும் காரணக்குறி; விணைத்தொகையன்மொழி.
சடங்கினாலுயர் ஆகுதித் தழலவன் - ஓமாக்கினி.                      (708)

78.- மணவினை முடித்தபின்பு கண்ணன் அருச்சுனனை
நகையாடுதல்.

முன்னம் யாவையு முடித்தருண் மொய்துழாய் முடியோன்
கன்ன னாருயிர் கொளவளர் காளையைத் தழீஇக்கொண்டு