பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்45

முடிக்க, பின்பு சந்தனு கூறத்தொடங்கினா னென்பதைத் தெரிவிப்பது, இது.
கங்கையாள்தன் பழஞ் சரித்திரங் கூறிய முகத்தால், சந்தனுவை இன்னானென்றும்,
தன்னாற்கொல்லப்பட்ட குழந்தைகள் எழுவரும் வசுக்களென்றும், ஈற்று மகவு
பிரபாசனென்றவசு என்றும், மன்னவன் இத்துணைநாள்பெற்ற குழந்தைகளைக்
கொன்றதற்குஇரங்காது இப்போது இரங்கித்தடுத்ததற்குக் காரணமும் கூறியவாறு
காண்க.                                                     (81)

74.-பிறப்பு உணர்த்தியமைக்குக் கொண்டாடி,சந்தனு கங்கையாளை இச்சிறுவன்செய்வதென்னென்று வினாவுதல்.

அறப்பயனென்னுமா றறிவிலாவெமைப்
பிறப்புணர்த்தினைமகப் பேறுசெய்துநீ
இறப்பவரெழுவரோ டேகலாவுயர்
சிறப்புடையினையவன் செய்வதென்னென்றான்.

     (இ - ள்.) 'அறம்பயன் என்னும் ஆறு - தருமத்தின் பயனென்று கருதுமாறு
(வந்து), நீ-, மகப்பேறு செய்து - புத்திரப்பேற்றை (எனக்கு) உண்டாக்கி, அறிவு
இலாஎமை - பிறப்புணர்ச்சியற்றிருந்த எங்களை, பிறப்பு உணர்த்தினை -
(எங்கள்)பிறப்பையும் அறிவித்தாய்: இறப்பவர் எழுவரோடு -
இறந்துபடுதலையுடையரான ஏழுவசுக்களுடனே, ஏகலா - (தன்பதவிக்குச்)
செல்லுதற்கு உரியவனல்லாத, உயர் சிறப்புஉடை - மிக்க சிறப்பினையுடைய,
இனையவன் - இந்தக் குமாரன், செய்வது -செய்யவேண்டுவது, என் - யாது?'
என்றான் - என்று வினாவினான்; (எ-று.) -புதல்வனையும் உளப்படுத்தி 'எமை'
என்றது.                                                     (82)

75.- கங்கையாள் எட்டாங்குழந்தையின் தன்மையைப்பற்றி மன்னவனிடங்
கூறுதல்.

முக்குலத்தரசினு முதன்மையாலுயர்
இக்குலத்திவனலா தில்லைமாமகார்
அக்குலத்தவமுனி யருளினாலிவன்
மெய்க்குலத்தந்தையாம் விழைவுமில்லென்றாள்.

     (இ - ள்.) 'முக்குலத்து அரசின்உம் - (சூரியன் சந்திரன் அக்கினி என்ற)
மூன்றுக்ஷத்திரியகுலங்களி னரசருள்ளும், முதன்மையால் உயர் - முதல் தரமான
தன்மையைக்கொண்டு மேம்பாடுபெற்ற, இ குலத்து - இந்தக் குலத்திலேபிறந்த,
இவன்அலாது - இவனையல்லாமல், மா மகார் - பெருமைபெற்ற புதல்வர்,
இல்லைவேறொருவரும் இல்லை: அ - அந்த  [பிரசித்தமான], குலம் -
சிறப்புள்ள, தவம் முனிஅருளினால் - தவத்தைக்கொண்ட வசிட்ட முனிவனது
கருணையினால், இவன் -இந்தக் குமாரன், மெய் குலம் தந்தை ஆம் விழைவுஉம்
- உண்மையையுடையகுலத்திலே தந்தையாதற்கு ஏற்ற விருப்பமும், இல் -
உடையவனாகான், 'என்றாள் -என்று (அந்தக் குமாரன் செய்தியைக் கங்கையாள்)
தெரிவித்தாள்; (எ -று.)