(இ - ள்.) மக பெறுமவரில் - பிள்ளையைப் பெற்றாரில், ஒருவர் உம் பெறாத -எவரும் (இதுவரையிற்) பெற்றிராத, மகிழ்ச்சிஉம் - சந்தோஷமும், வாழ்வுஉம் -உயிர்வாழ்ச்சியும், மெய்வலிஉம் - உடல் வலிமையும், மிக பெறும் - மிகுதியாக அடைகின்ற, தவம் - தவத்தை, நீ புரிந்தனை - நீ செய்துள்ளாய்; இனி-, நின்னைவெல்ல வல்லவர்-, வேறு ஆர் - வேறுயாவர்? உகப்பு உற - மனத்தி லுற்சாகம் மிக, இவனோடு - இவனுடனே, அவனி ஆளுக - (நீ) பூமியை யாட்சிபுரிவாய், என்று - என்று சொல்லி,- தக பெறு மயில்உம் - நற்குணம்பெறுதலுள்ள மயில்போன்றசாயலுடைய கங்கையாளும், ஓர் அடிக்கு ஓர் அடி புரிந்து - (பிரிவாற்றாமையால்) ஓரடி மீது ஓரடியை வைத்தல்செய்து [மெல்ல மெல்ல அடிவைத்து நடந்து], தலைவன்மேல் உள்ளம் தகைவுஉற - தலைவனான மன்னவன்மீது (தன் மனம்) தடைப்பட்டுநிற்க, தட புனல் புகுந்தாள்- பெரிய கங்கைநீர் வெள்ளத்திலே புகுந்துமறைந்தாள்; (எ-று.) - மயில் - உவமையாகுபெயர். (96) 89.- மன்னவன் தன்புதல்வனைத் தேரின்மேல்வைத்துக் கொண்டு ஊரார் கைதொழத் தன்நகரஞ்சேர்தல். மனைவியைக்கண்டுமீளவும்பிரிந்த வருத்தமெய்த்திருத்தகு கேள்வித், தனையனைக்கண்டமகிழ்ச்சியாலருக்கன் றன்னெதிரிருளெனத் தணப்ப, நினைவினிற்சிறந்ததேர்மிசைப்புதனு நிறைகலைமதியுமே நிகர்ப்பப், புனைமணிக்கழலானவனொடுந்தனதுபுரமெதிர்கைதொழப் புகுந்தான். |
(இ - ள்.) மனைவியை-, கண்டு-, மீளஉம் - மறுபடியும், பிரிந்த - பிரிந்ததனால்தோன்றிய, வருத்தம் - துன்பம், மெய் திரு தகு கேள்வி - உண்மையான சிறப்புக்கொண்டு விளங்குகின்ற நூற் கேள்வியையுடைய, தனையனை- புத்திரனை,கண்ட - காணப்பெற்றதனாலுண்டான, மகிழ்ச்சியால்-, அருக்கன் தன் எதிர் இருள்என - சூரியனுக்கு எதிரே இருட்டுப்போல, தணப்ப - (இருந்த அடையாளமும்தெரியாது) நீங்க, நினைவினில் சிறந்த தேர்மிசை - மனத்தினைக்காட்டிலுஞ் சிறந்த[மனோவேகத்தினும் விரைவாகச்செல்லவல்ல] தேரின்மேல், புதன்உம் -புதனென்பவனையும், நிறை கலை மதிஉம் ஏ - நிறைந்த [பதினாறான] கிரணங்களையுடைய சந்திரனையுமே, நிகர்ப்ப - ஒப்பாகும்படி, மணி புனை கழலான் -மணிகளழுத்திய வீரக்கழலையணிந்த மன்னவன், அவனொடுஉம் -அந்தப்புத்திரனுடனே, தனது புரம் - தன்னுடைய பட்டணத்தில் [அஸ்தினாபுரியில்] உள்ளவர், எதிர் கைதொழ - எதிர்ந்து கைகூப்பி வணங்க, புகுந்தான் -பிரவேசித்தான்; (எ-று.) தண்ணளிநிரம்பியிருத்தலால் மன்னவனுக்கு மதியையும் பல கலைகளையும் முற்றவுணர்ந்த புலவனாயிருத்தலால் மைந்தனுக்குப் புதனையும் உவமை கூறினார். மனைவியைப்பிரிந்த துயரம் மகனை யடைந்த மகிழ்ச்சியின்முன்னே தலையெடுக்காமற்போனதை, அருக்கன்றன்னெதிரிருளெனத்தணப்ப என்று தொழிலுவமைகொண்டுவிளக்கினார். (97) |