106. | மானவர் பதியாம் வசுவினுக் கிவரை மகிழ்வுறக் காட்டலு மகனை, மீனவனெனப்பேர்கொடுத்தனன் கொண்டுமெல்லியலிவளை மீண்டளித்தான், யானுமின் றளவு மென்மக ளென்னு மியற்கையா லினிமையின் வளர்த்தேன், கானமென் குயில்போல் வந்துமீளவுந்தன் காவலர் குலத்திடைக் கலந்தாள். |
(இ - ள்.) மானவர் பதி ஆம் - மானுடர்க்குத் தலைவனாகிய, வசுவினுக்கு-, இவரை - இந்த மக்களை, மகிழ்வு உற - மகிழ்ச்சிபொருந்த, காட்டலும் - (நான்) காட்டியபோது,-(அந்தவசுமன்னவன்), மகனை-, மீனவன் எனபேர்கொடுத்தனன் கொண்டு - மீனவனென்று பேரிட்டு(த் தன்னுடன்) வைத்துக்கொண்டு, மெல்லியல் இவளை - இந்தப்பெண்ணை, மீண்டு-, அளித்தான் கொடுத்திட்டான்: யான் உம்-, இன்று அளவுஉம் - இன்றுவரையிலும், என் மகள் என்னும் இயற்கையால் - என்மகளென்று சொல்லக்கூடிய தன்மையினால், இனிமையின் வளர்த்தேன் - இனிதாகவளர்த்து வந்தேன்: (இவள்), கானம் மெல் குயில்போல் - இன்னிசையையுடைய மெல்லிய குயில் போல், வந்து - வளர்ந்துவந்து, மீளஉம் -, தன்காவலர் குலத்திடை - தனக்குரிய அரசர்குலத்திலேயே, கலந்தாள் - சேர்ந்திட்டாள்; (எ-று.) வலைஞர் தம் தலைவனிடத்து அந்தக்குழந்தைகளைத் தர, வலைஞர் தலைவனான அந்த உச்சைச்சிரவசு குழந்தைகளைவசுவுக்குக்காட்டின னென்க. காக்கையால் குஞ்சுபொரித்து வளர்க்கப்பெற்ற குயிலானது பிறகு தன்னினத்தையே சேர்ந்திடுமாதலால், பரதவரிடைவளர்ந்து மன்னவர்குலத்தைச் சேர்ந்த யோசனகந்திக்குக் குயில் ஏற்ற உவமையாம்: குயில் காக்கையால் முதலில் வளர்க்கப்படுவதுபற்றி, வட மொழியில் 'பரபுஷ்டம்' என்று ஒருபெயர்பெறும்: மீனவன்= மத்ஸ்ய: என்பதன் மொழிபெயர்ப்பு. (114) வேறு. 107.- வலைஞர் தலைவனது பேச்சைக் கேட்டபின், சந்தனு அம்மகளை மணத்தல். என்று கூறிவி டுத்தன னேந்தலும் அன்ற வைக்க ணவன்மொழி கேட்டுவந்து இன்று நற்றின மென்றிளந் தோகையை மன்ற லெய்தினன் மாநிலம் வாழ்த்தவே. |
(இ - ள்.) என்று கூறி விடுத்தனன் - என்றுசொல்லி (அந்தப் பெண்ணை)க் கொடுத்தான்: ஏந்தல்உம் - சந்தனு மன்னவனும்,- அன்று-, அவைக்கண் - சபையிலே(கூறிய), அவன் மொழி - அவ்வலைஞர்பதியின் வார்த்தையை,கேட்டு,-, உவந்து -மனம்மகிழ்ந்து,- இன்று நல் தினம் என்று-, 'இந்நாள் மணஞ்செய்து கொள்ளுதற்குஏற்ற நன்னாளாகும்' என்றுசொல்லி, இளந்தோகையை - இளமயில் போலுஞ்சாயலையுடைய அந்தப்பெண்ணை, மாநிலம் வாழ்த்த - பெரியநிலவுலகத்தார்வாழ்த்துக்கூற, மன்றல் எய்தினன் - விவாகஞ் செய்துகொண்டான்; (எ-று.) தான் விரும்பிவளைச் சிறப்புற்ற வசுவின் பெண்ணென்று அறிந்தமையால், சந்தனு உவந்தானென்க. |