அப்போது, அம்பிகை-, அம்பகம் - (தன்) கண்கள், ஒருக்காலும் சிறிதும், மலர்ந்திலள்- திறத்தாளில்லை; (எ-று.) வியாசமுனிவன் வந்து சேரும்போது அம்பிகை அச்சத்தால் தன் கண்களை மூடியவண்ணமே யிருந்தனளென்பதாம். புன்மணம் நிறைந்து என்பதற்கு - கலவைச்சந்தனம் முதலியவற்றின் நன்மண மில்லாமல் என்று கருத்துக்காணலாம்: "அஹ்ருத்யகந்தம்" என்று பாலபாரதத்திலுள்ளது. ஒளிகுறைந்தொல்கப்புனையுமெய் என்றது- உடம்பு விளக்கமுறாதவாறு மீசை தாடி உடல்மயிர் முதலியவற்றோடு கூடியவனாய் என்றவாறு. பொழுது - ருதுஸ்நாநம்செய்த பின் பன்னிரண்டு நாள்களுக்குஉட்பட்ட கருக்கொள்ளுதற்கு உரியகாலம். 13.- கருத்தோற்றுவித்து, வியாசன் விழிப்புலனில்லாமகவு உதிக்குமென்று தாயினிடம் தெரிவித்தல். பராசரன்றருமுனிநினைவொடு கருப்பதித்துமீளவுஞ்சென்று நிராசைநெஞ்சினனவசரத் தவளிடைநிகழ்ந்தமெய்க்குறிதன்னால் கராசலம்பதினாயிரம் பெறுவலிக்காயமொன்றினிற்பெற்றோர் இராசகுஞ்சரம்பிறந்திடும் விழிப்புலனில்லைமற்றதற்கென்றான். |
(இ-ள்.) பராசரன் தரு முனி - பாராசரமுனிவன் பெற்ற புதல்வனான வியாசன், நிராசை நெஞ்சினன் - ஆசையற்ற மனமுடையவனாய், நினைவொடு - கருத்தோடு, கரு பதித்து - கருப்பத்தைப் பதியச்செய்து, மீள உம் சென்று - மீண்டும் தாயினிடம்போய், அவசரத்து - (தான்) சென்றபோது, அவளிடை-அந்த அம்பிகையினிடத்திலே,நிகழ்ந்த-, மெய் குறி தன்னால் - உடலினடையாளத்தினால், 'காயம் ஒன்றினில் - தன்னோருடம்பில், கராசலம் பதினாயிரம் பெறு வலி - பதினாயிரம் யானை கொண்டுள்ள பலத்தை, பெற்று - அடைந்து, ஓர் இராச குஞ்சரம்- ஒரு ராஜசிரேஷ்டன், பிறந்திடும் - பிறப்பான்: அதற்கு - அந்த அரசமகவுக்கு, விழிபுலன்இல்லை - கண்ணாகியபொறி இருக்க மாட்டாது, ' என்றான் - என்று கூறினான்;(எ-று.) நிராசைநெஞ்சினன் என்றது - தாய்மொழியின்படி நடக்கவேணு மென்பதானால் அம்பிகையைச் சேர்ந்தானேயன்றிக் காமவசத்தனாய்ச் சேர்ந்தவனல்ல னென்பதைக் குறிப்பிக்கும். நிகழ்ந்த மெய்க்குறி தன்னால் என்றானென்க. இராசகுஞ்சரம் என்பதற்குஏற்ப அதற்கு என்று அஃறிணையாற் கூறினார். கராசலம் - கைம் மலை யென்பது,பொருள்: அசலமென்பது கரமென்ற அடைமொழியின் குறிப்பால் யானையென்றுபொருள்படும். அவஸரம் - வேளையென்று பொருளுள்ள வடசொல்: பொற்றோளிராசகுஞ்சரம் எனவும் பாடம். (168) 14.- அம்பாலிகையினிடம் பூமியைக்காக்கவல்ல ஒருபுதல்வனைத் தருமாறு வேண்டுதல். மீளவுந்தலைப்புதல்வனை நோக்கியேமிகமகிழ்வுறாவன்னை தூளவண்சடைத்தோன்றலம் பாலிகைசுதனொருவனைநல்க நாளபங்கயப்பதியென மதியெனநலந்திகழ்கவிகைக்கீழ் ஆளவம்புவியவனென நினைந்தினியளிக்கவென்றருள்செய்தாள். |
(இ-ள்.) தலைபுதல்வனை - (தனது) முதற்புதல்வனாகியவியாசமுனிவனை, மீளஉம் நோக்கி - மறுபடியும் பார்த்து, மிகமகிழ்வுஉறா - (பிறவிக் |