பக்கம் எண் :

104பாரதம்ஆரணிய பருவம்

     சங்குகளினின்றுமுத்துப் பிறக்கு மென்பதை, "தந்திவராக
மருப்பிப்பிபூகம் தழை கதலி, நந்து சலஞ்சல மீன்றலைகொக்குநளின
மின்னார்,கந்தரஞ்சாலி கழை கன்னலாவின்பல் கட்செவிகா, ரிந்து வுடும்பு
கராமுத்த மீனுமிருபதுமே"என்னும் கட்டளைக்கலித்துறையினால்அறிக.
தமனியம் - தபநீயம் என்ற வடசொல்லின் திரிபு:நெருப்பினாற்
காய்ச்சப்பட்டு நன்கு விளங்குவது எனக் காரணப்பொருள்படும்.
நடித்தலாகிய காரணத்தை 'சிலம்பொலிகூரும்'எனக் காரியத்தாற் கூறினார்:
உபசார வழக்கு.  மண்டபம் என்றது - சுதர்மையென்னுந் தேவசபையை,
ஆஸநம் - வீற்றிருக்குமிடம்.                                 (139)

140.-இந்திராணிவருதல்.

முருகவிழ்பரிமள மொய்த்ததண்டுழாய்   
மரகதகிரிதிரு மைத்துனன்றனைப்
பெருமிதவபிமனைப் பெற்றகாளையை
அருள்பெறுமுவகையோ டன்னையெய்தினாள்.

     (இ - ள்.)  முருகு அவிழ் - தேன் சொரிகின்ற, பரிமளம் மொய்த்த-
வாசனை நிரம்பிய, தண் துழாய் - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய,
மரகத கிரி - மரகத ரத்தினமயமான மலைபோற் கருநிறமான
கண்ணபிரானது, திரு மைத்துனன் தனை - அழகிய அத்தைபிள்ளையும்,
பெருமிதம் அபிமனை பெற்ற காளையை-வீரத் தன்மையையுடைய
அபிமந்யுவைப் பெற்ற வீரனுமாகிய அருச்சுனனை, அன்னை - தாயாகிய
இந்திராணி, அருள் பெறும் உவகையோடு - கருணையைக்கொண்ட
களிப்புடனே, எய்தினாள் - வந்து அடைந்தாள்;(எ - று.)

     தந்தையாகிய வசுதேவருக்கு உடன்பிறந்தமுறை யாதலால், குந்தி
கண்ணனுக்கு அத்தையாவள்: அவள் மகனாதலால், அருச்சுனன்
கண்ணனுக்கு மைத்துனனாயினான்;அத்தைமைந்தனை'மைத்துனன்'
என்பது, முற்காலத்து வழக்கம்போலும்.  உடன் பிறந்தவளது கணவனை
மைத்துனனென்று வழங்கும் வழக்கத்தின் படியும், கிருஷ்ணனது
உடன்பிறந்தவளாகிய சுபத்திரையென்பவளை அருச்சுனன் மணஞ்செய்து
கொண்டதனால், அவன் கண்ணனுக்கு மைத்துனனாவான் என்று அறிக.
எல்லாரோடும் ஒப்பநில்லாமற் பேரெல்லையாக நிற்றல்பற்றி, வீரத்துக்குப்
பெருமிதமென்று பெயர்.  அபிமன் - வடமொழித்திரிபு:இவன்
சுபத்திரையினிடம் பிறந்தவன்;தந்தையாகிய இந்திரனது மனைவியாதல்பற்றி,
இந்திராணி அருச்சுனனுக்கு அன்னையாயினாள்.                   (140)

141.-அருச்சுனன் இந்திராணியை வணங்குதல்.

அன்னையைமின்னிடையரியபாவையைக்
கன்னலையமுதொடுகலந்தசொல்லியை
உன்னருந்தவப்பய னுற்றமைந்தனும்
சென்னியையவள்பதஞ் சேர்த்துநின்றனன்.