பக்கம் எண் :

12பாரதம்ஆரணிய பருவம்

தில் வந்தால், நலன்உளோர் நலன்கள் எல்லாம் - நல்ல
ஊழ்வினையுள்ளவர்கள் அனுபவிக்கும் நன்மைகளை யெல்லாம், காண்டி -
அடைவாய்; (எ-று.)

     தேவமானத்தாற் பதின்மூன்றுநாள்கள் கழித்தல்வேண்டுமென்பது
முன்னையஏற்பாடு ஆதலால், 'நாள்கழித்து' என்றார்;இதனைக்
கீழ்ச்சருக்கத்தில் "அரிவையோடகன்றுநீவிரைவிரு மடவியெய்திச்,
சுரர்தினமீராறங்கட் டுன்னுதிர் மன்னுநாட்டி, லொருவருமறியாவண்ண
மொருதினமுறைதி ருங்கள், பெருவிற லரசும் வாழ்வும்
பின்னுறப்பெறுதிரென்றான்," "மறைந்துறைநாளினும்மை மற்றுளோ
ரீண்டுளாரென், றறிந்திடின் மீண்டு மிவ்வா றரணிய மடைதி ரென்றான்"
எனக் கூறியவாற்றாலும் அறிக. நலன் - நல்லூழுக்கு, ஆகுபெயர்.
'நலனுளோர்நலன்களெல்லாம் காண்டி'என்பதற்கு-இப்போது நல்ல
செல்வத்தையுடைய துரியோதனாதியரது நன்மைகளையெல்லாம் அழியப்
பார்ப்பாயென்றும், உன்னிடத்தில் நல்லநண்புடையவர்கள் செய்யும்
நல்லுதவிகளையெல்லாம் பெறுவாயென்றும் பொருள் கூறினுமாம்.  

     இதுமுதல் இருபத்தொருகவிகள், இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.                                (16)

17.அன்னையைச்சுபலன்பாவையருகுறவிருத்தியுங்கள்
தன்னையர்தம்மையாக சேனனூர்தன்னில்வைத்துப்
பின்னையும்வேண்டுவோரைப் பிரிவுறநெறியிற்போக்கி
நன்னயத்தொடுநீர்கானம் வைகுதனன்மையென்றான்.

     (இ-ள்.)அன்னையை-(உங்கள்)தாயாகிய குந்திதேவியை, சுபலன்
பாவை அருகு உற-சுபலனது மகளாகிய காந்தாரியின் பக்கலிலே
யிருக்கும்படி, இருத்தி-வைத்து, உங்கள் தன்னையர் தம்மை-உங்கள்
புத்திரர்களை, யாகசேனன் ஊர்தன்னில் வைத்து-யாகசேனனென்னும்
பெயரையுடைய துருபதமகாராசனது ஊரில் வைத்துவிட்டு, பின்னைஉம்
வேண்டுவோரை-மற்றும் அன்புடையவராகிய உறவினர் முதலானவர்களை,
பிரிவு உற-(உங்களைவிட்டுப்)பிரியும்படி, நெறியின் போக்கி-(அவரவர்க்கு
உரிய)வழியேஅனுப்பிவிட்டு, நீர்-நீங்கள், நல் நயத்தொடு-நல்ல நீதியுடனே,
கானம் வைகுதல்- காட்டில் வசித்தலே, நன்மை-நல்லதாம், என்றான்-என்று
அருளிச்செய்தான், (கண்ணபிரான்);(எ-று.)

     கீழ்க்கவியிலே "கிளைஞர்தமிருக்கைதோறும்"என்று பொதுவாய்க்
கூறியதனை இச்செய்யுளில் விசேடித்துக் கூறுகின்றான், இன்னாரின்னாரை
இன்னின்ன இடத்து அனுப்பலாமென்ற ஓரெண்ணப் பாகுபாடு தோன்றுதற்கு.
நகுலசகதேவர்க்குக் குந்தி தாயன்றாதல் தோன்ற, 'உங்கள்'என்பது
'அன்னை'என்பதனோடு சேர்க்காமல் 'தன்னையர்'என்பதனோடு
மாத்திரஞ் சேர்க்கப்பட்டது.  பாவை-ஆகுபெயர்.  தன்னையர்-தநயரென்ற
வடசொல்