பக்கம் எண் :

14பாரதம்ஆரணிய பருவம்

தையுடையயோகா நுஷ்டானஞ் செய்கின்ற முனிவர்களும்(தனக்கு)ஒப்பாகப்
பெறாத யுதிட்டிர ராசனும், தம்பிமார்உம்-(அவனுடைய)தம்பிகளும்
கானம்ஏ-காட்டையே, தாங்கள் ஆளும் காசினி ஆக கொண்டார்-தாங்கள்
அரசாளுகின்ற இராச்சியமாகக் கொண்டார்கள்[காட்டையேவாழிடமாகக்
கொண்டார்கள் என்றபடி];

      பாண்டவர்அரச ராதலால் 'கானமேகாசினியாகக் கொண்டார்'
என்றார்.  தருமபுத்திரன் மெய்த்திருவந்து உற்றாலும் வெந்துயர்வந்து
உற்றாலும் ஒத்திருக்குமுள்ளத்து உரவோனாதலாலும், தம்பிமார்கள்
இளையபெருமாள்போலத் தந்தமையனாரெழுந்தருளியுள்ள இடத்தையே
தமது இராச்சியமாக நினைக்கும் இயல்புடையர்களாதலாலும், கானமே
தாங்களாளுங் காசினியாகக் கொண்டாரென்ற தென்னலாம்.  தெளிந்த
அறிவுடையவனென்பது 'ஞானயோகிகளுமொவ்வாநரேசன்'என்பதன்
கருத்து.

     ஞானமாவது-பிறப்புமுத்திகளையும் அவற்றின் காரணங்களையும்
சந்தேக விபரீதங்களாலல்லாமல் உண்மையாக அறிதல்.  யோகமாவது -
இயமம் நியமம் முதலிய உறுப்புக்களுடன் தவஞ்செய்தல். நரேசன்-
குணசந்திபெற்ற வடமொழித்தொடர். கானம்-காநநம்என்ற வடசொல்லின்
விகாரம்.  காசினி-காச்யபீ என்ற வடசொல்லின் விகாரமென்பர்:
இருபத்தொருகால் அரசு களைகட்ட பரசுராமன் தான் வென்ற பூமியைப்
பாவந்தொலையக் காசியபமுனிவருக்குத் தானஞ்செய்தானாதலால், பூமி,
காசியபீயென்று பெயர் பெறும்.                              (19)

20.-யாவரும்போனபின் வியாசமுனிவன் பாண்டவரிடம்
வருதல்.

அவ்வனந்தன்னில்வந்த வரசெலாமகன்றபின்னர்
வெவ்வனம்விடாதுமேவித் தவம்புரிவியாதனென்னுஞ்
செவ்வனமுனைவன்வந்தே சேயவன்சேய்களான
இவ்வனசரிதர்தம்மை யினைவுடனெய்தினானே.

     (இ-ள்.)அ வனந்தன்னில்-அந்தக் காமியவனத்தில், வந்து-,அரசு
எலாம் - அரசர்களெல்லாம், அகன்ற பின்னர் - நீங்கின பின்பு,-
வெவ்வனம்மேவி - கொடிய காட்டிற் பொருந்தி, விடாது தவம் புரி-
இடைவிடாமல் தவத்தைச் செய்கின்ற, வியாதன் என்னும்-வியாசனென்று
சிறப்பித்துச் சொல்லப்படுகிற செவ்வனம் முனைவன்-பல
நன்மைகளையுமுடைய முனிவன், சேயவன் சேய்கள் ஆன-(தமது)
புத்திரனாகிய பாண்டுவினது குமாரர்களான, இ வன சரிதர் தம்மை-காட்டில்
வாசஞ்செய்கின்ற இவர்களை, இனைவுடன் - இரக்கத்துடன், வந்து
எய்தினான்-வந்து அடைந்தான்;

     பாண்டவர்கள் நாட்டையிழந்து காட்டையடைந்தமையைக்
கேள்வியுற்றுவந்தானாதலால், வியாசன் இரக்கத்தோடெய்தினான்.  வியாசன்
- பராசரமகாமுனிவருக்கு மச்சகந்தியினிடம் பிறந்தவர்; பராசரரருளினால்
பின்பு யோஜனகந்தியான தமது தாயின் கட்டளை