132.-அருச்சுனன்அம்புசெலுத்திப் பொருதல். இவருயிர்கவர்தர விடமிதுவெனவே நவையறுதிறலுடை நகுசரமுகையா அவரவரகலமு மணிகிளர்கரமும் தவருடன்விழவிழ வொருதனிபொருதான். |
(இ-ள்.)(அப்பொழுது அருச்சுனன்), 'இவர்உயிர் கவர் தர - இவ்வசுரர்களின் உயிரை வாங்குவதற்கு, இடம்-தக்கசமயம், இது - இதுவாம்,'என - என்று எண்ணி,-நவை அறு திறல் உடை - குற்றமற்ற வலிமையையுடைய, நகு சரம் - விளங்குகின்ற அம்புகளை,உகையா- செலுத்தி,-அவர்அவர்-அவ்வசுரர்களின், அகலம்உம் - மார்பும், தவருடன் - (பிடித்த) விற்களுடனே, அணி கிளர் கரம்உம் - அழகுவிளங்குகின்ற கைகளும், விழவிழ - மிகுதியாக விழும்படி, ஒரு தனி பொருதான்- ஒப்பில்லாதபடி தனியனாய்நின்று போர்செய்தான்;(எ-று.) கவர்தல் -கொள்ளைகொள்ளுதல்.காலமும் இடமாதல்பற்றி, இங்கே 'இடம்'எனப்பட்டது. இனி, முதலிரண்டடிக்கு - இவருயிரை யொழித்தற்கு இடம் இதுவென்னும்படி (மார்பில்) அம்பு செலுத்தி யென்றுமாம். அம்பின் வலிக்குக் குற்றமாவது-குறித்த இலக்கிற்சென்று படாமையும், பட்டும் அதனை அழியாமையுமாம். நகுசரம் - வினைத்தொகை;இதில், பகைவரது கிளர்ச்சியை நோக்கிப் பரிகசித்துச் சிரிக்கின்ற அம்பு என்னும் பொருளுந் தொனிக்கும். ஒருதனி - தன்னந்தனி என்றாற்போலமிகுதனியுமாம். உதையா என்றும் பாடம். (308) 133.-அருச்சுனனதுகணையைவிலக்கி, அவுணர் எதிராகப் படைதொடுத்தல். அவன்விடுமடுகணையடையவுநொடியில் பவனனதெதிர்சரு கெனநனிபறியக் கவனமொடெழுபரி ரதகதிகுலையத் துவனியொடெறிபடை யெதிரெதிர்தொடவே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) அவன்விடும்-அருச்சுனன் எய்கின்ற, அடு கணை அடையஉம் - கொல்லுகின்ற அம்புகளெல்லாமும், நொடியில் - நொடிப்பொழுதினுள்ளே, பவனனது எதிர் சருகு என-காற்றுக்கு எதிரிலே அகப்பட்ட சருகுகள்போல, நனி பறிய - மிகவும் மீண்டு செல்லும்படியும்,- கவனமொடு எழுபரி - விரைந்த நடையோடு செல்லுகிற குதிரைகளைப் பூட்டிய, ரதம் - (அருச்சுனனது) தேரினுடைய, கதி - செல்லுகை, குலைய- கெடும்படியும்,-துவனியொடு- ஆரவாரத்துடனே, எறி படை - பிரயோகித்தற்குரிய ஆயு |