154.-அருச்சுனனுடன்ஆசனத்தமர்ந்தபின் இந்திரன் மாதலியை நோக்கிவிசயற்குற்ற போர்த்தொழிலைநீ புகல்க எனல். அரிமுகக்கனகபீடத் தண்ணலையிருத்தியண்டர் இருபுடைமருங்குநிற்ப விந்திரனிருந்தபின்னர் மருவுபொற்றடந்தேரூரு மாதலிதன்னைநோக்கிப் புரிசிலைவிசயற்குற்றபோர்த்தொழில்புகனீயென்றான். |
(இ - ள்.)இந்திரன்-, அரி முகம் கனகம் பீடத்து - சிங்கத்தின் வடிவந்தோன்றச் சித்திரித்துச் செய்யப்பட்ட பொன்மயமான ஆசனத்தில், அண்ணலைஇருத்தி - அருச்சுனனைவீற்றிருக்கச் செய்து,-அண்டர் - தேவர்கள், இருபுடை மருங்குஉம் - இரண்டு பக்கங்களினிடங்களிலும், நிற்ப - நின்றுகொண்டிருக்க, இருந்த பின்னர் - (தானும் அவ்வாசனத்தில்) உடன் வீற்றிருந்தபின்பு,-மருவு பொன் தட தேர் ஊரும்-பொருந்திய பொன்மயமான பெரிய தேரைச் செலுத்துகிற, மாதலிதன்னைநோக்கி - மாதலியைப் பார்த்து, 'நீ-,புரி சிலைவிசயற்கு உற்ற - கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனனுக்கு நேர்ந்த, போர் தொழில் - யுத்தத் தொழிலின் விதத்தை, புகல்-சொல்வாய்',என்றான்-என்றுசொன்னான்; அரிமுகப்பீடம்- சிங்காதனம். மருவு - யாவராலும் விரும்பப்படுகிற, பொன் எனவுமாம். (330) 155.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:மாதலிஅருச்சுனன் திறனைவியந்து கூற, தேவர் பலரும் அருச்சுனனுக்குப் படைகளும் வரங்களும்உவந்து ஈதல் கூறும். மற்றவன்றொழுதுபோற்றிவானவர்குழுவுக்கெல்லாம் கொற்றவவென்னாலின்றுகூறலாந்தகைமைத்தன்றால் உற்றெதிர்மூன்றுகோடி யசுரருமுடனேசேர இற்றதுகண்டேன்பின்னர் வில்லினாணிடியுங்கேட்டேன். |
(இ - ள்.) அவன் - அந்த மாதலி, தொழுது - (இந்திரனை)வணங்கி, போற்றி - துதித்து, 'வானவர்குழுவுக்கு எல்லாம் கொற்றவ-தேவர்கள் கூட்டத்துக்கெல்லாம் அரசனே! (அருச்சுனனுக்கு நிகழ்ந்த போர்த்தொழில்), என்னால்இன்று கூறல்ஆம் தகைமைத்து அன்று - என்னால் இப்பொழுது சொல்லுதற்குக் கூடிய தன்மையையுடையதன்று:(ஆயினுஞ் சிறிது சொல்லுவேன்):மூன்றுகோடி அசுரர்உம்-(தோயமாபுரத்திலுள்ள நிவாதகவசராகிய) முக்கோடியசுரர்களும், எதிர்உற்று-(அருச்சுனனுக்கு) எதிரிலே வந்து, உடனே-, சேர-ஒருசேர, இற்றது - அழிந்ததை, கண்டேன்- பார்த்தேன்:பின்னர்-பின்பு, வில்லின் நாண் இடிஉம் கேட்டேன் - (அருச்சுனனது) வில்லின் நாணியின் இடிபோன்ற ஓசையையுஞ் செவியுற்றேன்;(எ - று.) |