19.-வீமன்கதலீவனத்துக் காவலரை உயிரொழித்துக் கர்ச்சித்தல். அக்கதலிவனந்தனக்குக்காவலாய வடலரக்கரனேகருடனடு போர்செய்து, மிக்கதலங்குருதியினால்வெள்ளமாக்கிவெகுண்டவர்த மாவியையும் விண்ணி லேற்றித், திக்கதலமுதலாமெவ்வுலகுமேங்கச்சிங்கநாதமுஞ்செய்தான் செய்த காலை, உக்கதலைமணியுரகராசற்கென்றாலும்பர்படுந்துயர மெம்மாலுரைக்கலாமோ. |
(இ-ள்.) அகதலி வனம் தனக்கு - அந்தக்கதலிவனத்துக்கு, காவல் ஆய - பாதுகாவலைச்செய்துகொண்டிருந்த,அடல் அரக்கர் அனேகருடன் - வலிமை பொருந்திய ராட்சசர்பலரோடும், அடு போர் செய்து - (அவருயிரை) அழிக்கவல்ல போரைச் செய்து,-மிக்கதலம் - பூமியின் பெரும்பகுதியை, குருதியினால்வெள்ளம் ஆக்கி - இரத்தவெள்ளம்பரவும்படிசெய்து, வெகுண்டவர்தம் ஆவியைஉம் - (தன்னோடு)கோபித்துப்பொருத அரக்கரின்உயிர்களையும்,விண்ணில் ஏற்றி - வீரசுவர்க்கத்தை யடையுமாறுசெய்து, திக்கு - கீழைத்திக்கிலிருப்பதாகிய, அதலம்முதல்ஆம்-அதலம்முதலான, எ உலகுஉம்-எந்த உலகமும், ஏங்க- ஏக்கமடையும்படி, சிங்கநாதமும் செய்தான்-;செய்த காலை- அப்படிச் சிங்கநாதஞ் செய்தபோது, (அந்தஒலியின் அதிர்ச்சியினால்),உரகராசற்கு- ஆதிசேஷனுக்கு, தலைமணி - சிரசிலிருக்கும் மாணிக்கம், உக்க-சிந்தின; என்றால்-இவ்வாறுநிகழ்ந்ததானால்,-உம்பர்படும் துயரம்- மேலுலகத்திலுள்ளவரான தேவர்கள் படுகின்ற துயரத்தை, எம்மால்-, உரைக்கல் ஆம்ஓ-சொல்ல முடியுமோ? (எ-று.) எல்லாப்பாரத்தையுங்கீழிருந்துசுமக்கும் ஆதிசேஷனது முடிமணியே வீமன்செய்த சிங்கநாதத்தால் உக்கதென்றால்,எப்போதும் சுகத்தையே யனுபவித்துக்கொண்டிருக்குந் தேவர்கள் மேனோக்கியெழுந்தன்மையுள்ள அந்தச் சிங்கநாதவொலியால் மிகவும் வருந்தினார்களென்பதுசொல்லாமலே விளங்கு மெனத் தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணிபடக் கூறினார். (356) 20.-வீமன்செய்தசிங்கநாதத்தால் யாவும் கலங்குதல். வரைகலங்கவனங்கலங்கக்கலங்குறாதமண்கலங்கவிண்கலங்க மகரமுந்நீர்த், திரைகலங்கத்திசைகலங்கவீறிலாத செகங்கலங்கவுகங் கலங்கச்சிந்தைதூயோர், உரைகலங்கவுளங்கலங்கத்துளங்கிமெய்யிலூன்கலங்கவிலங் கொடுபுள்ளினங்கள்யாவும், நிரைகலங்கவுலகினு யிர்படைத்ததம்மினிலைகலங்காதன வுண்டோநிகழ்த்தினம்மா. |
(இ-ள்.) வரைகலங்க - மலைகள்நிலைகுலையவும்,வனம் கலங்க - காடுகள் நிலைகலங்கவும்,கலங்குறாதமண் - அசையுந் தன்மையில்லாத இந்தப்பூமியும், கலங்க-,விண் கலங்க-,மகரம் முந்நீர் திரை கலங்க - சுறாமீனைக்கொண்ட கடலின் அலைகலங்கவும், திசை கலங்க - திக்குக்கள் கலங்கவும், ஈறுஇலாத - |