பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்253

     நெடுந்தகை -பண்புத்தொகையன்மொழி.  இலாய் - விளி. கேட்கென,
அகரவீறு-தொகுத்தல்.  மாதுஓ-ஈற்றசை.                       (378)

42.-மூன்றுகவிகள்-அநுமான் வார்த்தை:
அம்மலருள்ள இடம்முதலியவற்றைக் கூறுதலைத்
தெரிவிக்கும்.

அருநிதிக்கிழவன்றன தளகைமாநகரில்
மருமிகுத்தநீணமஞ்சன வாவியின்கரையில்
தருமலர்ப்பெருஞ்சோலையிற்றங்குமம்மலர்சென்று
உரிமையுற்றதுகோடன்மற் றும்பர்க்குமரிதால்.

     (இ-ள்.)அருநிதி கிழவன்தனது அளகை மா நகரில்-அருமையான
நிதிகளுக்குத் தலைவனானகுபேரனது (இராசதானியான) பெரிய
அளாகபுரியிலே, மலர் தரு பெரு சோலையில்- மலர்மரங்களையுடைய
பெரியதொரு சோலையிலே,மரு மிகுந்த நீள் மஞ்சனம் வாவியின்
கரையில்-வாசனையைமிகவீசுகிற பெரிய நீராடுதற்குரிய தடாகத்தினது
கரையிலே, அம் மலர் - அந்த அழகிய பூ, தங்கும்-பொருந்தியுள்ளது;
சென்று-(அங்குப்) போய், உரிமை உற்று-சுதந்திரம்பெற்று, அது கோடல்-
அம்மலரைப் பெறுதல், உம்பர்க்குஉம் அரிது - மேலுலகத்திலுள்ள
தெய்வத்தன்மையுடைய தேவர்களுக்கும் அருமையானது;(எ-று.)

     'பாடக்கிரமத்தினும்பொருள்கொள்ளும்முறை வலியுடைத்து'என்ற
நியாயத்தை யனுசரித்து, மூன்றாமடியைமுன்னும், இரண்டாமடியை
அதன்பின்னும் எடுத்துக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டது.  வாவியின்
கரை என்றது-நீர்நிலையின் நடுவரையிற் செல்ல வேண்டாவென்றற்கு.  இனி,
இக்கவியின் இரண்டு மூன்றாமடிகளைஉள்ளபடியே பொருள்கூறி, இம்மலர்
'கோட்டுப்பூவேயாகும்,நீர்ப்பூவன்று'என்று சாதிப்பாரு முளர்.
குபேரனுக்கு 'நிதிபதி'என்று வடமொழியிற் பெயராதலால், அவனை
'அருநிதிக்கிழவன்'என்றார். குபேரனது உத்தியானவனம், சைத்திரரத
மெனப்படும்;அது-சாதியொருமை.  மற்று, ஆல்-அசைகள்.        (379)

43.ஈறிலாவிகலரக்கரோ டியக்கர்தங்காவல்
கூறும்வாசகம்பொய்ப்பவர் கூர்தவமுயலும்
பேறிலாதவர்பேரரு ளிலாதவர்பிறிதும்
ஆறிலாதவர்தமக்குமங் கணுகுதலரிதால்.

     (இ-ள்.) இகல்- வலிமையையுடைய, ஈறுஇலா - இறுதியில்லாத
[மிகப்பல],அரக்கரோடு-அரக்கருடனே, இயக்கர்தம் - இயக்கருடைய,
காவல் - காவலைக்கொண்ட,அங்கு - அவ்விடத்திலே,-கூறும் வாசகம்
பொய்ப்பவர்-சொன்னசொல் தவறுபவர்க்கும், கூர்தவம் முயலும்
பேறுஇலாதவர்-மிக்க தவத்திலே முயலுகின்ற பாக்கியமில்லாதவர்க்கும், பேர்
அருள் இலாதவர் - பெருமைபெற்ற கருணையில்லாதவர்க்கும்,பிறிதுஉம்
ஆறு இலாதவர் தமக்குஉம்-மற்றும் நன்னெறியிலே செல்லமாட்டாதவர்க்கும்,
அணுகுதல் -