பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்259

திண் - வலிய, மெய்வகை - உடம்பின் வடிவத்தை, கொண்டது -
கொண்டதை, மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் - மேகங்களின்
வகை சேர்தற்கு இடமான அகன்ற வானுலகத்தவரான தேவர்களெல்லாம்,
கண்டு-,வியந்தார் - ஆச்சரியமடைந்தார்;

     அநுமானது வலியபேருருவத்தின் சுமை பூமியின் கீழிருந்து தாங்கும்
நாகர்களின் படங்களையழுத்துவதனால்,அவை சுருங்குமென்க.
சம்வர்த்தம் முதலாக மேகங்கள் எழுவகைப்படுமாதலால்,
'மைவகைசேரகல்வான்'என்றது.  நாகர் பணங்கள் சலிக்க என்று
பிரதிபேதம்.                                              (391)

55.-வீமன்அநுமானைக்காலிளைவுக்குமேற்
காணமாட்டாமை.

மேலளவாது விளங்கியசொன்மெய்ந்
நூலளவாகிய நுண்ணறிவோர்போன்
மாலளவன்றி வணங்குதலில்லான்
காலளவல்லது கண்டிலன்வீமன்.

     (இ-ள்.) மேல்அளவாது - மேலெழுந்தவாறு போகாமல் [ஆழ்ந்து
ஊடுருவிப்போய்],விளங்கிய - (அதனால்புத்திக்குத்) தெளிவாகத் தெரிந்த,
சொல்- (பல அருமையான விஷயங்களைச்)சொல்லுகின்ற, மெய் நூல் -
தத்துவ சாஸ்திரங்களின், அளவு ஆகிய - அளவிலே பொருந்திய, நுண்
அறிவோர் போல் - நுட்பமான அறிவையுடையவர்போல,-வீமன்-,-மால்
அளவு அன்றி வணங்குதல் இல்லான் - (ஸ்ரீராமபிரானாகிய)திருமாலின்
பெருமையை (வியந்து அவனை)அன்றி (வேறொருகடவுளை)
வணங்குதலில்லாத அந்த அநுமானுடைய, கால் அளவு அல்லது -
காலினளவையன்றி, கண்டிலன் - மேலே காணமாட்டாதவனாயினான்;

    நுண்ணறிவோர்போல மாலளவன்றி வணங்குதலில்லான் என்று
கூட்டாது, நுண்ணறிவோர் பரம்பொருளின் திருவடிகளிலேயே பக்தி
செலுத்துபவராதல்போல, வீமனும் காலளவே கண்டனன் என்று உரைத்தலும்
ஒன்று.  மேலளத்தல் - ஆழ்ந்து நோக்காது நுனிப்புல் மேய்ச்சலாக
அறிதல்.  "கற்றநூலளவேயாகுமா நுண்ணறிவு","கற்றனைத்தூறுமறிவு"
என்பன காண்க.

56.-வீமன்அந்த அநுமானது சோதிமேனியைக் கண்
கொண்டுபார்க்கமுடியாது சுருக்கிக் கொள்ளுமாறு
வேண்டுதல்.

அருக்கனின்மும்மடி யாரொளிவீசும்
உருக்கிளர்மேனியை யூடுறநோக்கா
வெருக்கொடுதாண்மிசை வீழ்ந்தனன்மீண்டும்
சுருக்குகவென்று துதித்தனன்வீமன்.