வருணித்தார். தோன்றதோன்றும் வருணத்தையுடைய வரை எனக் கூட்டுக. (36) வேறு. 37. | ஆசினான்ம றைப்படியு மெண்ணில் கோடி யாகமத்தின் படியுமெழுத் தைந்துங் கூறிப், பூசினான்வ டிவமெலாம்வி பூதியாலப்பூதியினைப் புரிந்தசடைப் புறத்தே சேர்த்தான், றேசினா லப்பொருப் பின்சிகரமேவுஞ் சிவனிவனே போலுமெனத் தேவ ரெல்லாம், பேசினார்வரிசிலைக்கை விசயன் பூண்ட பெருந்தவத் தினிலைசிலர்க்குப் பேசலாமோ. |
(இ-ள்.) (அருச்சுனன்), ஆசு இல்-குற்றமில்லாத, நால்மறை படிஉம்- நான்கு வேதங்களிற் கூறிய விதமாகவும், எண் இல் கோடி-கணக்கில்லாத கோடிக்கணக்காகிய, ஆகமத்தின் படிஉம்-ஆகமங்களிற் கூறிய விதமாகவும், எழுத்து ஐந்துஉம் கூறி-ஸ்ரீபஞ்சாக்ஷர மகாமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, வடிவம் எலாம்-(தன்) உடம்பு முழுவதும், விபூதியால்-திருநீற்றினால், பூசினான்-: அ பூதியினை-அந்த விபூதியின் மிகுதியை, புரிந்த சடை புறத்தே கட்டியுள்ள சடையின்மேலே, சேர்த்தான்-அணிந்தான்; 'இவன்- இவ்வருச்சுனன், தேசினால்-ஒளியினால், அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன்ஏ போலும்-அந்தக் கயிலாச மலையினது உச்சியிலெழுந்தருளியிருக்கின்ற சிவனையே போல்வான்,'என-என்று, தேவர் எல்லாம்-தேவர்கள் யாவரும், பேசினார்-துதித்துச்சொன்னார்கள்; வரி-கட்டமைந்த, சிலை-காண்டீவமென்னும் வில்லையேந்திய, கை- கையையுடைய, விசயன்-அருச்சுனன், பூண்ட-(அப்போது) மேற்கொண்டு செய்யத்தொடங்கிய, பெரு தவத்தின்-மேலான தவத்தினது, நிலை-தன்மை, சிலர்க்கு பேசல் ஆம்ஓ-சிலரால் சொல்லுதற்கு முடியுமோ? (முடியாதென்றபடி); (எ-று.) எண்ணில்கோடி என்பது - இருபத்தெட்டு ஆகமங்களின் கிரந்தக்கணக்கையுட்கொண்டு. விசயன் என்பதற்கு-விசேஷமான வெற்றியை யுடையவனென்று பொருள்; ராஜசூயயாகத்திற்காக வடக்கிற்சென்று பல அரசர்களை வென்றதனாலும், இவனுக்கு இப்பெயர் அமைந்தது. சிலர்க்குப் பேசலாமோ என்றது-பலருங்கூடி ஒருங்கு பேசினாற் பேசமுடியுமே யல்லது தனித்தனிப் பேச முடியாதென்றபடி: அல்லது உலகத்து அறிவுடையர் சிலராதலால், அச்சிலராலும் பேசமுடியாதென்றலுமாம். வடிவமெலாம் என்றவிடத்து, எலாம் - ஒருபொருளின்பலவிடத்தைக்குறித்தது. தேவரெல்லாம் என்றவிடத்து, எல்லாம்-எஞ்சாமைப்பொருள் குறித்தது. இதுமுதலாறுகவிகள்-பெரும்பாலும் முதலிரண்டு சீர்களும் ஐந்து ஆறாஞ்சீர்களும் காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகி வந்த எண்சீராசிரியவிருத்தங்கள். (37) |