பொருட்டு ஒரு புத்திரியும் உதித்தல்வேண்டுமென்று யாஜஉபயாஜரைக் கொண்டு புத்திர காமயாகஞ் செய்விக்க, அவ்வோமத்தீயினின்றும் திட்டத்துய்மனும் திரௌபதியும் தோன்றினராதலின், 'தழலெழு தையலாள்' எனப்பட்டாள். தையலாள் - அழகுடையவள்; தையல் - அழகு. முனிவர் - கடவுளைத்தியானஞ் செய்பவரென்றும், முக்காலத்து ஞானமுடையவரென்றும் பொருள். காமியவனம், சரசுவதிநதி தீரத்திலுள்ளதென்பர். தௌமிய முனிவரின் ஏவற்படி தருமபுத்திரன் சூரியபகவானைத்துதித்து அட்சயபாண்டம்பெற்றுத் தன்னுடனிருக்கும் அந்தணர்களைப் போஷித்தா னென்பதை முதனூலா லறிக. ஏகாரம் - ஈற்றசை. இதுமுதல் மூன்று கவிகள் - ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள். (1) 2.- அவர்கள் அந்தக்காமியவனத்தின் அழகைக் காணுதல். ஆரமுமகிலுநாறு மருவியுஞ்சுனையுமத்த வாரணம்பிடிகளோடு வாரிதோய்கானியாறும் ஈரமுநிழலுங்காயுங் கனிகளும்யாவுமீண்டிக் காரினம்பொழியுமந்தக் கானகத்தழகுகண்டார். |
(இ-ள்.) ஆரம்உம் - சந்தனக்கட்டைகளும், அகில்உம் - அகிற் கட்டைகளும், நாறும் - நல்மணம் வீசப்பெற்ற, அருவிஉம் - மலையருவிகளும், சுனைஉம் - மலைச்சுனைகளும், மத்த வாரணம் - மதம் பிடித்த ஆண்யானைகள், பிடிகளோடு - பெண்யானைகளுடனே, வாரி தோய் - நீரில் விளையாடப்பெற்ற, கான் யாறுஉம்-காட்டாறுகளும், ஈரம்உம் - குளிர்ச்சியும், நிழல்உம்-மரநிழல்களும், காய்உம்-காய்களும், கனிகள்உம் - பழங்களும், யாஉம் - மற்ற எல்லாப் பொருள்களும், ஈண்டி - (தன்னிடத்தே) பொருந்தப்பெற்று, கார் இனம் பொழியும் - மேகக்கூட்டம் மழை பொழிவதற்கிடமான, அந்த கானகத்து - அந்தக்காமிய வனத்தினது, அழகு - அழகை, கண்டார் - பார்த்தார்கள், (பாண்டவர்கள்); (எ-று.) ஆரமும் அகிலும் மலையினின்று அடித்துக்கொணரப்படுபவை. சுனை - நீரூற்றுள்ள மலைக்குளம். பிடி - யானையின் பெண் பெயர்; "பிடியென் பெண்பெயர் யானைமேற்றே"என்றார்,ஆசிரியர் தொல்காப்பியனார். காய், கனி - காய்ப்பது, கனிவது எனக் காரணப்பெயர். (2) 3.-பாண்டவர் சென்றபின் அச்சூழல் முகில்கள்தோன்றி விலங்குகளும் பகையற்று இமயமலைச் சாரல்போல் அழகுபெற்றிருத்தல். அங்கிவர்புகுந்தபின்ன ரங்கியின்புகையுமாறிப் பொங்கியவோமத்தீயின் புகையினான்முகிலுண்டாகச் சிங்கமுந்துதிக்கைமாவுஞ் சேர்ந்துடன்றிரியச்சூழல் எங்கணுமழகுபெற்ற திமகிரிச்சாரல்போன்றே. |
|