பக்கம் எண் :

332பாரதம்ஆரணிய பருவம்

வேறு.

14.-வீமன்அங்குச் சங்கத்துவானஞ் செய்தல்.

சீர்த்தாரைக ளுதிரத்திசை மருவுங்கரி சிதறக்
கார்த்தாரைகள் கற்றாரைகளுருமேறொடுகக்க 
வார்த்தாழ்கட லுலையக்கதிர்மணிவெள்வளைவாய்வைத்து
ஆர்த்தானுக வந்தத்தெழு மடன்மாருத மனையான்.

     (இ-ள்.) உகஅந்தத்து எழும் அடல் மாருதம் அனையான்-
யுகாந்தகாலத்திலே வீசுகின்ற வலிய பெருங்காற்றை யொத்த வீமன், சீர்
தாரைகள் உதிர - சிறப்பையுடைய நட்சத்திரங்கள் கீழ்ச் சிந்தவும்,-திசை
மருவும் கரி சிதற-திக்குக்களிற் பொருந்தின யானைகள்[திக்கஜங்கள்]
நிலைபெயரவும்,-கார்தாரைகள் கல் தாரைகள் உரும் ஏறொடுகக்க -
மேகவரிசைகள் கல்மழைகளைப்பேரிடிகளுடனே சொரியவும்,-வார்தாழ்
கடல் உலைய- நீண்ட ஆழ்ந்த கடல் கலங்கவும், கதிர் மணி வெள் வளை
வாய் வைத்து ஆர்த்தான் - ஒளியையுடைய அழகிய வெண்ணிறமான
சங்கத்தை (த் தனது)  வாயிலேவைத்து ஆரவாரித்தான்;(எ-று.)-தாரை-
ஆவீறு ஐயான வடசொல்.

     இதுமுதல் பதினைந்துகவிகள்- பெரும்பாலும் ஈற்றுச்சீரொ ன்று
மாச்சீரும், மற்றையமூன்றும் மாங்கனிச்சீர்களு மாகிய அள வடிநான்கு
கொண்ட கலிவிருத்தங்கள்.                              (516)

15.-அந்தத்தொனிஅளகாபுரியிலுள்ளார் செவியில்விழ
அவர்கள் படையுடன்திரண்டு நெருங்குதல்.

அந்தத்தமரஞ்சென்று யளகாபுரியுறைவோர்
சிந்தைத்துயருறமற்றவர் செவியிற்செறிவுறலும்
இந்தத்தொனிபுரிவானிவ னெவனோவெனவெவரும்
முந்திக்கரிபரிதேரிவை கொண்டேயுடன்மொய்த்தார்.

     (இ-ள்.) அந்ததமரம் சென்று - அந்தச்சங்கத்தொனி போய், உயர்
அளகாபுரி உறைவோர் சிந்தை துயர்  உற - சிறந்த அளகை நகரத்தில்
வசிப்பவர்களது மனந் துன்பமடையும்படி, அவர் செவியில் செறிவுறலும் -
அவர்கள்காதுகளிற் சேர்ந்தவளவில்,-எவர்உம்- (அந்நகரில் வசிப்பவர்)
பலரும், இந்த தொனி புரிவான் இவன் எவன்ஓ என - இந்தஓசையைச்
செய்பவனாகியஇவன் எவனோவென்றுஐயமுற்று, முந்தி - (ஒருவரினும்ஒருவர்)
முற்பட்டு, கரி பரி தேர் இவை கொண்டு - யானை குதிரை தேர் என்னும்
இச்சேனைகளைக்கூட்டிக்கொண்டு, உடன் மொய்த்தார் - விரைவாய்
நெருங்கினார்கள்;(எ-று.)

     மற்று - அசை,தொனி-த்வநி;வடசொல்.  உந்தியெனப் பதம் பிரித்து,
செலுத்தி யென்றும் பொருள்கொள்ளலாம். முந்தக்கரிபரி தேரிவை மேல்
கொண்டுடன் மொய்த்தார் என்று ஈற்றடியிற் பாடாந்தரம்.             (517)