பக்கம் எண் :

34பாரதம்ஆரணிய பருவம்

     இது-முதல்நான்கு சீர்கள் காய்ச்சீர்களும், மற்றையிரண்டும்
மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தம்.(43)

வேறு.

44.-இதுவும் அடுத்த கவியும் -
அருச்சுனன்தவஞ்செய்த தன்மையைக் கூறும்.

அங்கியா லங்கியை வெதுப்பி வெம்மையைப்
பொங்கிய வாயுவாற் போக்கி மெய்ச்சிரந்
தங்கிய வமுதினாற் றண்ணெ னும்படி
இங்கிதத் தொடுக்கின னிதயந் தன்னையே.

     (இ-ள்.) (அருச்சுனன்), அங்கியால்-(மேலெழுகின்ற) உடம்பிலுள்ள
பிராணவாயுவினால், அங்கியை-(இருதய கமலத்திற் சஞ்சரிக்கின்ற)
அக்கினியை, வெதுப்பி-மேலே யெழுப்பி, வெம்மையை-(அவ்வக்கினியின்)
வெப்பத்தை, பொங்கிய வாயுவால்-(அங்ஙனம்) மேலெழுந்த வாயுவை
அடக்குவதனால், போக்கி-ஒழித்து,-மெய்சிரம் தங்கிய அமுதினால்-உடம்பின்
உத்தம அங்கமாகிய சிரசிலே தங்கியுள்ள அமிருதத்தினால்,
தண்ணெனும்படி-குளிர்ச்சியடையும்படி, இதயந்தன்னை-மனத்தை,
இங்கிதத்து-இனிமையாக, ஒடுக்கினன்-(தியானத்தில்) ஒடுங்கச்செய்தான்;
(எ-று.)

     இந்திரியங்ளைஒடுக்கி இடைகலையால் வாயுவை இரேசித்துப்
பதினாறுமாத்திரையளவு பூரித்து அறுபத்துநான்குமாத்திரையளவு கும்பித்து
அவ்வாயுவைப் பிங்கலையால் அறுபதுமாத்திரையளவு இரேசித்துச் சுஷு
முனையிற் செலுத்தவேண்டுதலாலும், அக்கினிமண்டலமாகிய
உடல்மத்தியிலுள்ள அக்கினியை வன்னி பீசத்தால்தோய்தலாலும்,
நாசிநுனியாகிய சந்திரமண்டலத்தின் வழியே ஆறாதாரங்களையுந் தரிசித்துச்
சிரசினின்றுஉருகிச் சிந்துகின்ற அமுதத்தைப் பருகவேண்டுதலாலும்
இங்ஙனங்கூறினார்.  சுஷு முனை இடை பிங்கலை என்பன-தசநாடியிற்
சேர்ந்தவை.  இவற்றில்  சுஷு முனை - மூலாதாரம்  சுவாதிஷ்டாநம்
மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞைஎன்கிற ஆறுஆதாரங்கட்கும்
இடமான குதம் குய்யம் நாபி இதயம் அடிநா நெற்றி என்னும்
ஆறிடங்களிலும் ஊடுருவிநிற்பதொருநாடி: இடை பிங்கலை என்பன -
கத்திரிகைக்கால்போல ஒன்றோடொன்று பின்னிநிற்கும் இரண்டு நாடிகள்.
இடைகலை-இடமூக்கால்வருஞ் சுவாசம்.  வலமூக்கால் வருஞ் சுவாசம்-
பிங்கலை.  மூச்சைவெளிவிடுதல் - இரேசகம்: உள்வாங்குதல் - பூரகம்:
கும்பகம் - பிராணவாயுவைச் சமப்படுத்தியடக்குதல்.  சிரத்திற் பிங்கலை
இடைநாடிகட்குநடுவே புருவமத்தியிலே அமிருதம் சிந்தும்.  அங்கி-
அங்கத்திலுள்ளது.  இங்கிதத்து-பாவனையிலென்றுமாம்.  "கிளர்ந்தகாலினா
லங்கியை நிமிர்த்து மேற்கிடைத்து, வளர்ந்தபிங்கலையிடை
நடுவழியுகுமதியின், விளைந்தவின்னமுதுண்டு நம்விடையவன்வடிவங்,
குளந்தனிற் குறித்தவனுருக்கொண்டவரிவர்காண்"என்னுந் திருவிளையாடற்