56.-மணிமான்மாயையை மேற்கொண்டு தோன்றதல். புகையொடுகலந்துகால் பொங்கமங்குல்கள் வகைபடவெழுந்துமா மாரிசிந்திடச் சிகையனல்விண்ணெலாஞ் செகுக்கமண்ணெலாம் துகள்படத்திசையெலாஞ் சூழ்ந்துதோன்றினான். |
(இ - ள்.)புகையொடு கலந்து கால் பொங்க-புகையோடு கூடிப் பெருங்காற்று எழுந்துவீசவும், மங்குல்கள் வகை படஎழுந்து மா மாரி சிந்திட-மேகங்கள் பலவகையாய் எழுந்து(பரவிப்) பெரியமழையைப் பொழியவும், சிகை அனல் விண் எலாம் செகுக்க-சுவாலைகளையுடைய அக்கினி ஆகாயத்தினிடமுழுவதையும் அழிக்கவும், மண் எலாம் துகள் பட-பூமிமுழுவதிலுந் தூளியெழும்பவும், (மணிமான்), திசை எலாம் - எல்லாத்திக்குக்களிலும், சூழ்ந்து - பரவிநின்று [வஞ்சனைசெய்து], தோன்றினான்-;(எ-று.)-'புகையொடுகரந்து','புகையொடுபரந்து'என்றும் பாடம். (558) 57.-வீமன்வைஷ்ணவாஸ்திரத்தால் மாயையை யொழித்தல். அப்பொழுதினிலிக லரிப்பதாகனும் முப்புரஞ்சுடுமுகி னிறத்துவாளிமுன் ஒப்பறவருளுட னுதவுஞ்சோரிவாய் வைப்பெரும்பகழியொன் றேவிமாற்றினான். |
(இ - ள்.) அபொழுதினில் - அந்தச்சமயத்தில், இகல் அரி பதாகன்உம் - வலிமையையுடைய சிங்கத்தின்வடிவத்தையெழுதின கொடியையுடைய வீமனும், மு புரம் சுடும் முகில் நிறத்து வாளி - திரிபுரத்தையொழித்த அம்பாகிய மேகம்போலுங்கரியதிருநிறத்தையுடைய திருமால், முன்-முன்னொருகாலத்தில்,ஒப்புஅற அருளுடன் உதவும்- ஒப்பில்லாதபடி கருணையுடனேகொடுத்தருளின, சோரிவாய்வை பெரு பகழி ஒன்று-பகைவரிரத்தந்தோய்ந்த கூரிய நுனியையுடைய சிறந்தஅம்பொன்றை, ஏவி-(வீமன்) பிரயோகித்து, மாற்றினான்-(மணிமான்செய்த மாயையை) ஒழித்தான்;(எ - று.) வீமன்பிரயோகித்தது, வைஷ்ணவாஸ்திரம். விஷ்ணு, வேண்டிய பொழுது மாயையை ஒழித்தருளவல்ல இயல்பினராதலால், அவரைத் தெய்வமாகவுடைய அஸ்திரம் மாயைக்கு எதிராம். சிவபிரான் திரிபுர சங்காரஞ் செய்தகாலத்தில் பல தேவர்கள் பலவகையாய் உதவிசெய்ய, திருமால் அம்புவடிவமாய்நின்றதை, "குழல்நிறவண்ண நின்கூறுகொண்ட, தழல்நிறவண்ணன் நண்ணார்நகரம், விழ நனி மலைசிலைவளைவு செய்தங்கு, அழல்நிறவம்பது வானவனே"என்னும் பெரியாரருளிச்செயலாலும் காண்க. ஓரம்பு உதவின ஓரம்பு என ஒருசாதுரியந்தோன்றக் கவி கூறினார். வாளியென்றது திருமாலையாதலின், 'முகில்நிறத்து'என்ற அடைமொழி அதற்கு ஏற்றது. ஈற்றடியில் 'இப்பெரும் பகழி'என்றும் பாடம். (559) |