வேறு. 79.-குபேரன் சினந்துசிலகூறலுறுதல். அழுங்கினான்மன்னனல் லறிவு மாவியும் மழுங்கினான்வடிவமு முடியும் வல்விடம் விழுங்கினானெனநனி வெகுண்டு நெஞ்சுறப் புழுங்கினானிவையிவை புகறன் மேயினான். |
(இ-ள்.)(இங்ஙனந் தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்டு), மன்னன்- ராஜராஜனெனப்படுகிற குபேரன், வல் விடம் விழுங்கினான்என - கொடிய விஷத்தை யுட்கொண்டவன்போல, நல் அறிவுஉம் ஆவிஉம் அழுங்கினான்- நல்லஉணர்ச்சியும் உயிரும் ஒடுங்கினவனாய்,வடிவம்உம் முடிஉம் மழுங்கினான்- (தனது) உடம்பும் தலையும்ஒளி வேறுபட்டு, நனி வெகுண்டு-மிகவுங்கோபித்து, நெஞ்சு உற புழுங்கினான்-மனம்மிகக்கொதித்து, இவை இவை புகறல் மேயினான்- இந்தஇந்த வார்த்தைகளைச் சொல்லுதலைப்பொருந்தினான்;(எ-று.)-அவற்றை மேல் நான்கு கவிகளிற் கூறுகிறார். இதுமுதல்இருபத்துநான்குகவிகள் - இச்சருக்கத்தின் ஐம்பத்தைந்தாங்கவிபோன்ற கலிவிருத்தங்கள். (581) 80.-இதுமுதல் மூன்றுகவிகள்-குபேரன்சினந்துகூறுவன. ஒருவனாமானுடனோதைமாநகர் வருவனாம்விறன்மணிமானொடுஞ்சமர் பொருவனாமவனுயிர்பொன்றவென்றிடர் தருவனாமென்பெயர்தனதனாகுமாம். |
நான்குகவிகள் -ஒருதொடர். (இ - ள்.)மானுடன் ஒருவன்ஆம்-யாரோஒரு தனிமனிதனாம்;ஓதை மா நகர் வருவன் ஆம் - மதில்சூழ்ந்த சிறந்த (நமது) அளகாபுரிக்கு(அவன்) வந்திடுவனாம்;விறல் மணிமானொடுஉம்சமர் பொருவன்ஆம் - வெற்றியையுடையமணிமானுடனே போர்செய்வானாம்;அவன் உயிர் பொன்ற வென்றுஇடர் தருவன்ஆம்-அம்மணிமானது உயிர் ஒழியும்படி சயித்து (நமக்கு)த்துன்பத்தை விளைப்பானாம்;(இப்படியிருக்க), என் பெயர் தனதன் ஆகும்ஆம் - என்னுடைய பெயர் தனதனெனப்படுவதாம்! (எ - று.) இக்கவியிலுள்ளஆம்என்னுஞ்சொற்கள் பலவும், வியப்புப் பொருளோடு அலட்சியத்தையும் குறிக்கின்றன;"கைத்தோடுஞ்சிறை கற்போயை, வைத்தோ னின்னுயிர் வாழ்வானாம்,பொய்த்தோர் வில்லிகள் போவாராம், இத்தோ டொப்பதி யாதுண்டே"எனக் கம்பராமாயணத்திலுங் காண்க;வருகிற இரண்டுகவிகளிலும் இவ்வாறே. வருவன், பொருவன், தருவன் என எதிர்காலத்தாற் கூறினது, அச்செய்கைகள் அசம்பாவிதமானவையென்பதை விளக்கும். ஓதைமாநகர் என்றதனால், அந்நகரியின்காவல் எவர்க்குங் கடத் |