பக்கம் எண் :

376பாரதம்ஆரணிய பருவம்

95.-இதுவும்,மேற்கவியும்-தருமன் குபேரனைத்துதிப்பன.

அனகனேயமலனே யளகைவேந்தனே
தனதனேசங்கரன் றன்சகாயனே
புனிதனேகுபேரனே புலத்தியன்குல
செனகனேசெல்வனே தேவதேவனே.

மூன்று கவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.)அனகனே-பாவமில்லாதவனே! அமலனே-
குற்றமில்லாதவனே! அளகை வேந்தனே - அளகாபுரியரசனே தனதனே-
வேண்டுவார்க்கு வேண்டிய) செல்வத்தைக் கொடுப்பவனே! சங்கரன்
தன்சகாயனே-சிவனதுதோழனே! புனிதனே- பரிசுத்தகுணமுள்ளவனே!
குபேரனே-! புலத்தியன் குலம் செனகனே - புலஸ்தியமகா
முனிவருடையகுலத்திற் பிறந்தவனே! செல்வனே - எல்லாச்செல்வங்களையும்
உடையவனே! தேவதேவனே - தேவர்களுக்குத் தலைவனே!(எ - று.)

     படைத்தற்றொழிலில்தனக்கு உதவியாம்படி பிரமதேவனாற்
சிருஷ்டிக்கப்பட்ட உபப்பிரமர்கள் ஒன்பதின்மருள் ஒருவராகிய
புலஸ்தியப்பிரசாபதியினது குமாரர் விச்சிரவசு;அவரதுபுத்திரன்
குபேரனென்க.  செனகன் - ஐநகன்;
வடசொல்.  ஒருகால்பார்வதிமீதுகண்
சென்று அதனால்அக்கண் மழுங்கியதனால்,குபேரன் என்று பெயர்:
இழிவான, பேரன்-உடலுள்ளவனென்க.                        (597)

96.வெறுப்பதோவிளைந்ததுமிகையதாயினும்
மறுப்பதோவென்மொழி மாறுகொண்டெதிர்
செறுப்பதோவிளையவர்செய்ததீமைகள்
பொறுப்பதேபெரும்புகழ் புனிதமூர்த்தியே.

     (இ-ள்.) புனிதமூர்த்தியே-பரிசுத்தமான வடிவமுடையவனே!
வெறுப்பதுஓ-(நீ) வெறுக்கத்தக்கசெயலோ, விளைந்தது-(என்தம்பியால்)
நேர்ந்துவிட்டது;அது-,மிகை ஆயின்உம்-குற்றமானாலும்,என் மொழி-
எனது(வேண்டுகோள்) வார்த்தையை, மறுப்பதுஓ-(நீ ஏற்றுக்கொள்ளாது)
விலக்குவது தகுதியோ?இளையவர்செய்த தீமைகள் - சிறியவர் செய்த
குற்றங்களுக்காக, மாறு கொண்டு - பகைமைகொண்டு, எதிர் - (அவற்றுக்கு)
எதிராக, செறுப்பதுஓ-(அவர்களை)அழிப்பது தகுதியோ?பொறுப்பதுஏ -
(அவற்றைப்) பொறுத்திடுவதே, பெரு புகழ்-மிகுந்த கீர்த்திக்குக் காரணமாம்;

     இளையவர்செய்ததீமைகள் - மத்திமதீபம்.  ஓகாரங்கள் மூன்றனுள்,
முன்னது - இழிவுசிறப்பு;பின்னவை-எதிர்மறை.               (598)

97.-தருமனுடைய துதியினால்சினம்மாறிக்
குபேரன் அவனையுபசரித்தல்.

எனவிவனிவைபகர்ந் திசையவேத்தலும்
முனிவொடுவயிரமு முரணுமாறியே
மனனுறமகிழ்ந்தெதிர் கொண்டுமார்புறத்
தனதனுந்தருமனைத்தழீஇக்கொண்டானரோ.