பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்97

126.வந்தவன்முந்துமுன் மங்கைதன்னுடன்
இந்தவெற்புறைதருமெயினவேடமாய்ச்
சுந்தரமரகதச்சோதிவீரனே
அந்தவல்லசுரனையம்பின்வீழ்த்தினேன்.

     (இ - ள்.)சுந்தரம் - அழகிய, மரகதம் சோதி-மரகதரத்தினம் போன்ற
பச்சையொளியையுடைய, வீரனே - வீரனானஅருச்சுனனே!அவன்-
அவ்வசுரன், வந்து-, முந்து முன்-(உன்னைக்கொல்ல) முற்படுதற்கு
முன்னே, (யான்), மங்கைதன்னுடன் - உமாதேவியுடனே, இந்த வெற்பு
உறைதரும் எயின(ன்) வேடம் ஆய்-இந்தமலையில்வாசஞ்செய்கிற
வேடனது வடிவமாகி, அந்த வல் அசுரனை- வலிமையையுடையவனாகிய
அந்த மூகாசுரனை,அம்பின்-அம்பினால்,வீழ்த்தினேன்-கொன்று
தள்ளினேன்;

     அஸு ரன் என்ற  வடசொல்லுக்கு  -  பாற்கடலினின்று  தோன்றிய
சுரையைப் பருகாதவ னென்றும், தேவர்களுக்கு எதிரானவ னென்றும்,
பகைவருடைய உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்கொள்ளப்படும். (126)

127.நின்னுடனமர்செய்து நின்வின்னாணறுத்து
அந்நெடுவில்லினாலடியுமுண்டனன்
உன்னருமல்லினாலுதையுமுண்டனன்
என்னினியுன்கருத்தென்றுகூறினான்.

     (இ - ள்.)நின்னுடன் - உன்னுடனே, அமர் செய்து-யுத்தம் பண்ணி,
நின் வில் நாண் அறுத்து-உனது வில்லினது நாணியை அறுத்துவிட்டு, அ
நெடு வில்லினால்அடிஉம் உண்டனன் - அந்தப்பெரிய வில்லின்
தண்டத்தால் அடியும் பட்டேன்;உன் அருமல்லினால்உதைஉம்
உண்டனன்-உனது அருமையான மற்போரினால்உதையும் பட்டேன்:இனி
உன் கருத்து என்-இப்பொழுது நீ கருதிய வரம் யாது? (சொல்வாய்), என்று
கூறினான்-; (எ - று.)

     அடியும்உதையும், உம்மைகள்-எச்சப்பொருளன:இழிவு சிறப்புமாம்.
உன்னரு-நினைத்தற்குஅரிய, மல் எனினுமாம்.              (127)

128.-அருச்சுனன்பாசுபதம் வேண்டுதல்.

அந்தவில்விசயனுமரன்பதம்பணிந்து
எந்தைபாரதவமர்க் கிசைந்தவீரர்மெய்
சிந்தநின்பேர்பெறு தெய்வவாளியைத்
தந்தருளென்றனன் றவத்தின்மேனின்றான்.

     (இ - ள்.) தவத்தில் மேல் நின்றான் - தவத்திற் சிறந்து
நின்றவனாகிய, அந்த வில் விசயன்உம்-விற்போரில் வல்ல
அவ்வருச்சுனனும், அரன் பதம் பணிந்து-சிவனது திருவடிகளை வணங்கி,
'எந்தை-எமது தலைவனே! பாரதம் அமர்க்கு இசைந்த வீரர் மெய் சிந்த-
பாரதயுத்தத்துக்கு இணங்கிவந்த பகைவீரர்களது உடம்பைச்
சிதறடிக்கும்பொருட்டு, நின் பேர் பெறு தெய்வம்