(எல்லாவொளிகளினுஞ்) சிறந்த ஒளியையுடையவனான கண்ணபிரான், கருணையுடன் - அருளுடனே, பரிந்துநோக்கி - (வீமசேனனை) அன்பாகப் பார்த்து,-'தலைவ - சிறந்த வீரனே! அம் புவியில் - அழகிய நிலவுலகத்தில், முன் பிறந்தோர் - முன்னே பிறந்தவர் [மூத்தவர், தமையனார் என்றபடி], அரசு நெறி முறை உரைத்தால் - இராசநீதியின் முறைமையைக் கூறினால், அது கேளாமல் - அவ்வார்த்தையைக் கேட்டு அங்கீகரியாமல், தம்பியரும் மறுப்பரோ - தம்பிமார்களும் மறுப்பார்களோ? [அல்லரென்றபடி]; (ஆதலால்), இனி கடுங்கோபம் தணிக - இனி (நீ) கடுமையான கோபம் ஆறுவாயாக,' என்றான் - என்று கூறியருளினான்; (எ - று.) துரியோதனாதியர்களை அழிக்கவேண்டு மென்பது போலவே, பாண்டவருள் ஒருவரோடொருவர் மாறுபடக்கூடாதென்பதும் தமது திருவுள்ளமாதலால் கண்ணன் இங்ஙனம் ஏற்றபடி நீதி போதித்து வீமனது கோபத்தை மிகாது தணிப்பவனானான். வீமனும் என்ற உம்மை கதைத்தொடர்ச்சி பற்றிவந்த இறந்தது தழுவிய எச்சம். மீண்டும் என்ற உம்மையும் இறந்தது தழுவிய எச்சமே. கீழ்ப் பன்னிரண்டாங் கவிமுதல் ஐந்து கவிகளில் ஒருகால் வீமன் சில கூறியுள்ளதனை நோக்கி 'மீண்டும் இவை யெடுத்துரைப்ப' என்றனர். பரந்தாமன் என்ற சொல்லுக்கு - (எல்லாப் பதவிகளிலுஞ்) சிறந்த முத்தித் தானத்தையுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்; தாமம் - ஒளியும், இடமுமாம். தலைவ (நீ) கோபந்தணிக - குணப்பெயர் குணியின் முடிபை யேற்றது. 'தலைவ' என்றது - தன் வழிப் படுத்துதற்காகத் துதியாக கூறியது. தம்பியரும், உம்மை - சிறப்பும்மை. திருமாலின் சக்கராயுதம் சுதரிசனமென்னும் பெயரினது. (81) 22.-இதுமுதல் நான்கு கவிகள் - ஒருதொடர்:அருச்சுனன் வார்த்தை. மைக்காலமுகிலூர்தி வானவர்கோன்றிருமதலை வணங்கி நின்று, முக்காலங்களுமுணரு முகுந்தனுக்கு முதல்வனுக்கு மொழிவான் மன்னோ, அக்காலம்பொறுத்தவெலா மமையாமலின்னமிருந் தறமே சொன்னால், எக்காலம்பகைமுடித்துத் திரௌபதியுங் குழன்முடிக்க விருக்கின்றாளே. |
(இ -ள்.) (இங்ஙனம் வீமனது கோபத்தைக் கண்ணபிரான் தணித்த பின்பு), மை - கரிய, காலம் - கார்காலத்து மழை பொழிகின்ற, முகில் - மேகத்தை, ஊர்தி - வாகனமாகவுடைய, வானவர் கோன் - தேவர்கட்கு அரசனான இந்திரனது, திரு மதலை - சிறந்த குமாரனாகிய அருச்சுனன், - வணங்கி நின்று - நமஸ்கரித்து எழுந்து நின்று,- முக்காலங்களும் உணரும் முகுந்தனுக்கும் - மூன்று காலத்துச் செய்திகளையும் அறிகிற கண்ணபிரானுக்கும், முதல்வனுக்கும் - மூத்த தமையனான தருமனுக்கும், மொழிவான் - (சில் வார்த்தை) கூறுவான்; (அவை யாவையெனின்:)- 'அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் - (முன்புசூதாடிய) அந்தக்காலத்திற் |