பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 103

உணவென்றிருப்பதுவே - உணவே என்றிருப்பது என ஏகாரம் பிரித்துக்
கூட்டப்பட்டது.                                         (83)

24.தீண்டாதகற்புடைய செழுந்திருவைத்துகிலுரியச்
                              செயலொன்றின்றி,
நீண்டானேகரியானே நிமலாவென் றரற்றினளாய்
                                  நின்றுசோர,
மாண்டார்போலதுகண்டு மன்னவையில்யாமிருந்தமாசுதீர,
வேண்டாவோவேண்டுவது மேம்படுநல் லறமேயோ
                              வேந்தர்வேந்தே.

     (இ -ள்.) வேந்தர் வேந்தே - அரசர்களுக் கரசனே! - தீண்டாத -
(அயற்புருஷரால்) தொடுதற்குந் தகாத, கற்பு உடைய - பதிவிரதா
தருமத்தையுடைய, செழுந் திருவை - அழகிய இலக்குமி போன்ற
திரௌபதியை, துகில் உரிய - (துரியோதனன் தம்பி) ஆடையைக்
களைகையில், (அவள்), செயல் ஒன்று இன்றி - (அதற்குப் பரிகாரமாகச்)
செய்யத்தக்கது ஒரு காரியமுமில்லாமல், நீண்டானே கரியானே நிமலா என்று
அரற்றினள் ஆய் - (முன்னேதிரிவிக்கிரமனாய்) நீண்டவனே!
கரியதிருநிறமுடைய கண்ணனே! குற்றமற்ற மூர்த்தியே! என்று கூவி (க் கதறிக்
கண்ணனையே) பிரார்த்தித்தவளாய், நின்று சோர - தளர்வடைந்து நிற்க, அது
கண்டும் - அந்நிலையைப் பார்த்திருந்தும், யாம் - நாம் ஐவரும், மன்
அவையில் - அவ்விராசசபையிலே, மாண்டார்போல் இருந்த - (யாதொன்றுஞ்
செய்யாமல்) இறந்தவர்போலத் தொழிலற்றிருந்த, மாசு - குற்றம், தீர
வேண்டாவோ - நீங்க வேண்டுவதில்லையோ? வேண்டுவது மேம்படு நல்
அறமேயோ - செய்யவேண்டுவது சிறந்த நல்ல தருமமாகிய பொறுமை
மாத்திரமோ? (எ - று.)

     அவளதுபதிவிரதா தருமத்தினது நெருப்போடொத்த தூய்மையை
விளக்குதற்கு, 'தீண்டாத கற்பு' என்றார்; இனி, அவளைத் துகிலுரிந்தது
தீண்டக்கூடாமல் விலக்காயிருந்த காலத்திலாதலால், 'தீண்டாத திரு'
என்றதாகவுங்கொள்ளலாம்.  கற்பு - கணவனையே தெய்வமாகக்கொண்டு
அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நடத்தை; பாதிவிரத்தியம்.  கணவனிற்
சிறந்த தெய்வமில்லையென்றும் அவனை இன்னபடி வழிபடவேண்டுமென்று
தாய்தந்தையரும், அந்தணரிடத்தும் பெரியோரிடத்தும் உறவினரிடத்தும்
தேவரிடத்தும் நடக்க வேண்டுவது இன்னபடி யென்று கணவனும் கற்பித்தலால்
ஒழுகும் ஒழுக்கமாதலின் கற்பு என்பது காரணப்பெயரென்பர்.  இனி, கல்லின்
தன்மைபோல நிலைகுலையாத உறுதியுடையதென்றுமாம்.  திரௌபதி, பேர்
கூறின மாத்திரத்தில் பெரும்பாவங்களையொழிக்க வல்ல பஞ்சகன்னிகைகளுள்
ஒருத்தியாவள்; (அவராவர் - அகலியை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி
என இவர்.  முன்னைய பிறப்பின் வரத்தாலும், குந்திதேவியின்
கட்டளையாலும், ஐவர்க்கு மனைவியானதால் திரௌபதியின் கற்பு
நிலைமைக்குச் சிறிதுங் குறைபாடில்லையென அறிக.  திரு - திரௌபதிக்கு
உவமையாகுபெயர்.  நல்வினையுடையார்க் கெல்லாம் பொதுவாகின்ற
திருமகள்போல, இவளை மனைவியாகப் பெறுதற்கேற்ற பூர்வசன்ம
சுகிருதமுடைய பாண்டவரைவர்க்கும் இவள் பொதுப்பட மனைவியாதலால்,
இவளைத்