பக்கம் எண் :

116பாரதம்உத்தியோக பருவம்

    'நீயன்றி மாபாரத மகற்ற மற்றார்கொல் வல்லார்' என்றது,
பாரத யுத்தத்தைநடத்தி முடித்திடுமாறு சங்கற்பித்துக் கொண்டுள்ள நீயே அது
நிகழவொட்டாதுதடுப்பதற்கும் வல்லமை யுடையாய் என்பதைக் குறிக்கும்.
கோவிந்தனென்றதிருநாமம், கோவர்த்தனமலையைக் குடையாக எடுத்துப்
பசுக்களைப்பாதுகாத்தருளிய காலத்திற் கண்ணனுக்கு உண்டானது; இதற்கு -
பசுக்களைக்காப்பவனென்று பொருள்.  இப்பெயர் - உயிர்களைக்
காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும்பொருள்படும். அகற்ற - அகல
என்பதன் பிறவினை.  கொல் - அசை.  பூபாரம் தீர்த்தல் - பூமியில் நிறைந்த
துஷ்ட அசுரர்களையும் கெட்ட அரசர்களையும் ஒழித்து இதனால் பூமிக்கு
நேர்ந்த பாரத்தைப் போக்குதல்.

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் காய்ச்சீர்களும், மாச்சீர்களும்
விளச்சீர்களுமாக நான்கு சீர்களும் விரவிவந்த அளவடி நான்குகொண்ட
கலிவிருத்தங்கள்;சீர்கள் அளவொத்து வராமையாலும், தாழப்பட்ட ஓசை
யுடைமையாலும், நாற்சீர் நான்கடித்தரவு கொச்சகமெனினுமாம். (94)

35.-இதுவும் அது.

பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன் கொன்றணங்கின்
காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டி
நேராகக் கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்
வாராமற் காக்கலா மாபாரதமென்றான்.

     (இ -ள்.) கன்னன் பார் ஆள - கர்ணன் பூமியை அரசாட்சி
செய்யும்படி, இகல் பார்த்தனை முன்கொன்று - (அவனிடத்துப்)
பகைமையையுடைய அருச்சுனனை முன்னே கொலைசெய்து, அணங்கின் கார்
ஆர் குழல் களைந்து - சிறந்த மகளான திரௌபதியினது கருநிறம் பொருந்திய
கூந்தலை அரிந்துவிட்டு, காலில் தளை பூட்டி கை பிடித்து நின்னையும் யான்
நேர் ஆக கட்டுவன் ஏல் - கால்களிலே விலங்கையிட்டுக் கைகளையும்
பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டிவைப்பேனானால், மா பாரதம்
வாராமல் காக்கலாம் - பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம்,'
என்றான் - என்று சொன்னான், (சகதேவன்); (எ - று.)

    இங்ஙனம் சகதேவன் தம்மவரென்றும் பிறரென்றும் வேறுபாடு காட்டாது
நடுவுநிலைமையாகத் தனது உள்ளக்கிடையைச் சிறிதும் ஒளியாமல்
வெளியிட்டன னென்க.  தருமன் எங்ஙனமாயினும் அரசாள
வேண்டுமென்றதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வேனென்ற சபதமும்,
விரித்த கூந்தலை முடிக்குமாறு திரௌபதி கூறிய பிரதிஜ்ஞையும், கண்ணனது
சங்கல்பமுமே பாரதயுத்தம் நடப்பதற்கு மூலமாதலால், இங்ஙனம் கூறப்பட்டது.
வீமசேனனது பெரிய பிரதிஜ்ஞைகள், திரௌபதியின் பிரதிஜ்ஞையை
நிறைவேற்றுதற்கு அங்கமாய் முடிதலால், அப்பிரதானமாக்கி அதில்
அடக்கப்பட்டன.  நகுல சகதேவர்களது சபதங்கள் பிரதானமல்லவென்று
நீக்கப்