பக்கம் எண் :

12பாரதம்உத்தியோக பருவம்

வெண்மையென்பதுவடிவத்துக்கு - நிறத்திலும், சொல்லுக்கு -
அறியாமையிலும் சென்றனவாயினும், பண்பால் ஒத்தலால், சிலேடையாக
வெள்ளையென ஒரு சொல்லாற் கூறினார்.  புயல் - உவமவாகுபெயர். (4)

கண்ணன் உலூகனைத் தூதுபோகச்சொல்லித்தான் துவாரகை
சேர்தல்.

5.பேருலூகமும்பிணையுநல்கியபெரும்பிறப்புடைப்பரித்திண்டேர்க்
காருலூகலநிகரடிக்களிறுடைக்கண்ணிலாவரசன்பாற்
சீருலூகனைத்தூதுசென்றிவர்மனஞ்செப்பிமீள்கெனப்போக்கி
யோருலூகலமுடன்றவழ்ந்தவன்றனதூர்புகுந்தனனன்றே.

     (இ -ள்.) (என்று சொன்னபின்), ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் - ஒரு
உரலுடனே தவழ்ந்துசென்றவனாகிய கண்ணன், சீர்உலூகனை - சிறப்புடைய
உலூகனென்னும் அந்தணனை நோக்கி, பேர் - பிரசித்திபெற்ற, உலூகமும் -
உயர்ந்தசாதி யாண்குதிரையும், பிணையும் - (அந்தச்சாதிப்) பெண் குதிரையும்,
நல்கிய - (சேர்ந்து) பெற்ற பெரு பிறப்பு - சிறந்த உற்பத்தி முறைமையை,
உடை - உடைய, பரி - குதிரைகளையும், திண் தேர் - வலியதேர்களையும்,
கார் உலூகலம் நிகர் அடி களிறு - பெரிய உரலையொத்த கால்களையுடைய
யானைகளையும், உடை - உடைய, கண் இலா அரசன்பால் - பிறவிக்
குருடனான திருதராஷ்டிர மகாராசனிடத்து, தூதுசென்று - (நீ) தூதுபோய்,
இவர் மனம் செப்பி - இப்பாண்டவரது கருத்தைக் கூறி, மீள்க - (அவன்
கருத்தை யுணர்ந்து) திரும்பிவருவாயாக, என - என்று சொல்லி, போக்கி -
(அவ்வுலூகனை அத்தினாபுரத்துக்குச்) செல்ல உடன்படுத்தி, தனது ஊர்
புகுந்தனன் - தனது துவாரகாபுரியை அடைந்தான்; (எ - று.) - அன்று, ஏ -
ஈற்றசை; - தேற்றப்பொருளில் வருதலு முண்டு: அப்பொழுதே யென்றுமாம்.

     சதுரங்கசேனைகளுள்பிரதானமான குதிரை தேர் யானை என்ற
மூன்றையுங் கூறி, அவற்றை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தும் வீரரையும்
காலாட்சேனையையும் உபலட்சணத்தாற் பெறவைத்தார்.  ஒரு பிராணி
சிறந்ததாயிருத்தற்குத் தந்தைமரபு தாய்மரபு என்ற  இரண்டும் முக்கிய
காரணமாதலால் 'பேருலூகமும் பிணையு நல்கிய பெரும்பிறப்புடைப் பரி
என்றார்.  உலூகமென்பதற்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இங்கு ஆண்குதிரை
யெனப் பொருள் கொள்ளப்பட்டது.  பிணை - பெண்பாற்பெயர்:  இது
குதிரைக்குரிய தாதலை "புல்வாய்நவ்வியுழையேகவரி, சொல்வாய்நாடிற்
பிணையெனப்படுமே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்து 'சொல்வாய் நாடின்'
என்ற மிகையாற் கொள்ளவேண்டும்.  'பிணை - பிணைவது எனக்
காரணப்பெயர்; பிணைதல் - சேர்தல்; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது; இச்சொல்லின் பொருளை 'பிணையென்னுஞ் சொற்பொருளினை
உண்மைநோக்கின் பிரியாது பிணையும் பிறசாதிக்கும் சேவற்கும்செல்லும்'
என்றதனாலும் அறிக.  கருமையென்னுஞ் சொல் - கருப்பு நிறத்தையே யன்றி,
பெருமைக் குணத்